மோடியின் இந்து தேசியவாதி பேச்சு.. நாட்டை பிளவுபடுத்த வேண்டாம்: திக்விஜய்சிங்
டெல்லி: "நான் ஒரு இந்து தேசியவாதி" என்று கூறி நாட்டை பிளவுபடுத்த வேண்டாம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நான் ஒரு இந்து தேசியவாதி என்றும் 2002 குஜராத் வன்முறைகளை கார் டயரில் சிக்கிய நாய்க்குட்டி என்றும் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. குஜராத் வன்முறைகளை நாய்க்குட்டியுடன் ஒப்பீடு செய்து பேசியதற்காக கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மோடியின் மற்றொரு கருத்தான "இந்து தேசியவாதி"யை காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் கடுமையாக விமர்சித்திருக்கிறார். தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்திருக்கும் திக்விஜய்சிங், இந்து தேசியவாதி, முஸ்லிம் தேசியவாதி, சீக்கிய தேசியவாதி என்று இருப்பதைவிட தேசியவாத இந்தியர்களாக இருப்போம். இந்த நாட்டில் இருதேசம் என்கிற கருத்தாக்கத்தை உருவாக்கியவர்களே ஜின்னாவும் சாவர்க்கரும்தான்.. அவர்கள் செய்ததைப் போல இந்த நாட்டை மதரீதியாக பிளவுபடுத்திவிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications