என்.எல்.சி. விவகாரம்: மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்காதது துரதிருஷ்டம்- கருணாநிதி

இது குறித்து அவர் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,
கேள்வி: என்.எல்.சி. தொழிலாளர்களின் போராட்டம் நீடிப்பதால் மின் உற்பத்தி பாதிக்கப்படுமே?
பதில்: இது குறித்து கவலைப்பட வேண்டியவர்கள் கவலைப்பட்டால் நாங்கள் திருப்தி அடைவோம். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான் சேர்ந்து அதற்காக முயற்சித்து வருகிறோம். முதல்வர் ஜெயலலிதா அதற்காக முயற்சி செய்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ஆனால் அது குறித்து மத்திய அரசு இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் இருப்பது துரதிருஷ்டவசமானது.
கேள்வி: கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும்போது மீண்டும் போராட்டம் துவங்கியுள்ளதே?
பதில்: கூடங்குளம் திட்டம் வேண்டும். ஆனால் அதே சமயம் அப்பகுதி மக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமல் முன் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று தான் நான் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன்.
கேள்வி: சேது சமுத்திர திட்டத்தை திமுகவால் நிறைவேற்ற முடியாது என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளாரே?
பதில்: எங்களால் முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம்.
கேள்வி: சேது சமுத்திரத் திட்டத்திற்காக செலவு செய்யப்பட்ட ரூ.2,000 கோடியை சோனியா மற்றும் உங்களிடம் இருந்து பெற வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளாரே?
பதில்: சுப்பிரமணிய சுவாமி சில நேரங்களில் நல்ல விஷயங்களையும், சில நேரங்களில் இது போன்ற விஷயங்களையும் தெரிவிப்பார். அதையெல்லாம் பொருட்படுத்தி அவருக்கு பதில் கூற விரும்பவில்லை. சேது சமுத்திர திட்டத்திற்கு ராமர் பெயரையோ, கிருஷ்ணன் பெயரையோ வைத்துக் கொள்ளலாம். பெயரில் எந்த தகராறும் இல்லை. தமிழகத்தின் நன்மைக்காக தான் அத்திட்டம் தேவை.












Click it and Unblock the Notifications