சென்னை: 10 மாடி கட்டிடத்திலிருந்து விழுந்த சாப்ட்வேர் நிறுவன எஞ்ஜினீயர் உடல் சிதறி பலி - தற்கொலையா?
அவர் தற்கொலை செய்து கொண்டாரா, தள்ளிவிடப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரக்கோணம் வனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அன்னியப்பனின் மகன் நவீன்குமார். டிரிபிள் இ முடித்துவிட்டு, கந்தன்சாவடி ராஜிவ் காந்தி சாலையில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் எஞ்ஜினீயராக வேலை செய்து வந்தார். அவர் வேலை செய்யும் நிறுவனம் 12 மாடி கட்டிடம்.
நேற்று ஞாயிற்றுக்கிழமையும் நவீன்குமார் வேலைக்கு வந்துள்ளார். பிற்பகல் 1 மணியளவில் 10வது மாடியில் இருந்து திடீரென நவீன்குமார் கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே தலை சிதறி இறந்தார். செக்யூரிட்டிகள் ஓடிவந்து அவரது அடையாள அட்டையை பார்த்து நவீன்குமார் என தெரிந்து கம்பெனிக்கு தகவல் கொடுத்தனர்.
தரமணி காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அவர் கீழே விழும் காட்சிகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘நவீன்குமார் தவறி விழுந்து இறந்ததுபோல தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரும் அவரை மேலிருந்து தள்ளிவிட்டனரா என விசாரிக்கிறோம். முதல் கட்ட தகவலின் படி, காதல் தோல்வியால்தான் அவர் குதித்திருக்கக் கூடும் என தெரிய வந்துள்ளது,'' என்றனர்.