சீக்கிரமே கரைந்து போனது அமர்நாத் பனிலிங்கம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கம் இந்த ஆண்டு வெகுசீக்கிரமாகவே கரைந்து போனதால் யாத்ரீகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்து போயுள்ளனர்.
இயற்கையை தெய்வமாக வழிபடுகிறவர்கள் நாம்.. கல்லுக்கும் மரத்துக்கும் கூட இறைசக்தி இருக்கிறது என்கிற நம்பிக்கை பொதுவாக இருக்கிறது. புனித தலங்களுக்குச் செல்வோர் கல்லையும் நீரையும் புனிதப் பொருளாக கருதி வீட்டுக்கு எடுத்து வருவர்.
இப்படியான ஒரு நம்பிக்கைகளில் ஒன்றுதான் அமர்நாத் பனிலிங்கம். ஆண்டுதோறும் பல லட்சம் பேர் இந்த பனிலிங்க தரிசன யாத்திரைக்காகவே ஜம்மு காஷ்மீரில்குவிகின்றனர். மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் பனிலிங்கத்தை தரிசித்துவிடுவதற்காகவே காத்திருந்து யாத்திரை செல்கின்றனர்.

அமர்நாத் குகை எங்கு உள்ளது?
ஜம்மு காஷ்மீரின் தென்பகுதியில் பத்தல் என்ற பகுதியில் இருந்து 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் இமயமலையில் இக்குகை இருக்கிறது.

உருவாகி கரையும் காலம்
பொதுவாக ஜூன் மாதம் முதல் இந்த பனி லிங்கம் உருவாகும். ஆகஸ்ட் மாத இறுதியில் இது கரைந்து விடும்.

நடப்பாண்டு யாத்திரை
நடப்பாண்டில் ஜூன் மாதம் 28-ந் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்கியது. ஆகஸ்ட் 21-ந் தேதி வரை இந்த யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

விரைவில் கரைந்தது
ஆனால் ஜூலை மாதத்தின் 2வது வார காலத்திலேயே பனிலிங்கம் கரையத் தொடங்கி இப்போது முழுமையாக கரைந்தே போய்விட்டதால் யாத்ரீகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

புவிவெப்பமயமாதல் காரணம்?
முன் எப்போதையும்விட பனி லிங்கம் விரைவில் கரைந்து போனதற்கு காரணம் புவி வெப்பமயமாதல் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications