சிபிஐக்கு குறைவான அதிகாரங்களே இருக்கின்றன: உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல்!!
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் சிபிஐயின் அதிகாரம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தது. சிபிஐக்கு போதுமான அதிகாரம் அளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசும் சிபிஐக்கு தன்னாட்சி அளிப்பது தொடர்பான பரிந்துரைகளை பிரமாண பத்திரமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், சிபிஐக்கு தன்னாட்சி அளிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் இது தொடர்பாக சிபிஐ கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.
இதற்கு பதிலாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தங்களுக்கு மிகக் குறைவான அதிகாரங்கள்தான் இருக்கின்றன. மத்திய அரசின் செயலருக்கு இணையான அதிகாரம் இருக்க வேண்டும்.
உள்துறை அமைச்சரை நேரடியாக சிபிஐ இயக்குநர் சந்திப்பதற்கான அதிகாரம் தேவை. சிபிஐ இயக்குநரின் பதவிக் காலம் 2 ஆண்டுகள் என்பதை 3 ஆண்டுகாலமாக மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.