கள்ளச்சாராயம் காய்ச்சி டாஸ்மாக் மூலம் விற்ற அதிமுக எம்.எல்.ஏவின் அண்ணன் மகன்கள்!
விழுப்புரம்: அதிமுக எம்.எல்.ஏ குமரகுருவின் அண்ணன் மகன்கள் இருவர், தங்களுக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
உளுந்தூர்ப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் குமரகுரு. இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். இவரது அண்ணன் மகன்கள் நித்தியானந்தம் மற்றும் நமச்சிவாயம். இருவரும் அதிமுகவில் பதவிகளில் உள்ளனர்.
இவர்கள் இருவரும் தங்களது சித்தப்பா குமரகுருவின் சொந்த ஊரான எடக்கல் என்ற கிராமத்தில் உள்ள தங்களுக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி வந்துள்ளனர்.
மேலும் மிகக் கொடூரமான முறையில் இந்த கள்ளச் சரக்கை அவர்கள் தயாரித்துள்ளனர். அதாவது சாராயம் காய்ச்சி அதில் கலர் பவுடரைக் கலந்து டாஸ்மாக் கடைகளில் கொடுத்து அதன் மூலம் விற்று வந்துள்ளனர்.
போலீஸாருக்கு இதுகுறித்துப் புகார்கள் போயின. ஆனால் எம்.எல்.ஏவின் அண்ணன் மகன்களாச்சே என்று ஆரம்பத்தில் போலீஸார் தயங்கியுள்ளனர். பின்னர் நெருக்கடி அதிகரிக்கவே நடவடிக்கையில் இறங்கினர்.
கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வந்த இடத்திற்கு சென்ற போலீஸார் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த 32 பெட்டி கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். போலி மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.