கிரானைட் மோசடி: அரசுக்கு ரூ.1,203 கோடி இழப்பு - பி.ஆர்.பி. நிறுவனம் மீது மேலும் ஒரு வழக்கு

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகளில் சட்ட விரோதமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக முன்னாள் கலெக்டர் சகாயம் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, உயர்மட்ட விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 56 குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
மேலூர் தெற்கு தெருவில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் மற்றும் 13 கிரானைட் கம்பெனிகளும் மூடப்பட்டது. முறைகேட்டில் ஈடுபட்ட கிரானைட் நிறுவன அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, மேலூர் கிராம அதிகாரி அனுராதா மேலூர் போலீசில் இரண்டு புகார்களை கொடுத்துள்ளார். அதில், பி.ஆர்.பி. நிறுவனம் திருவாதவூர் கீழசுனைக்குளம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்கள், கண்மாய்களில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டியுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு 900 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மற்றொரு புகார் மனுவில், சிந்து கிரானைட் நிறுவனம் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டியதில் அரசுக்கு 303 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த புகார்களின் பேரின் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன்கள் சுரேஷ், செந்தில், தேவேந்திரன், காந்தி, சிவரஞ்சனி, மகாராஜன், சந்திரலேகா, தவச்செல்வம் மற்றும் சிந்து கிரானைட் செல்வராஜ், அவரது மனைவி உமா, திருநாவுக்கரசு, சூர்யபிரகாஷ், ஹரிகரன், ஸ்ரீ முருகன் எண்டர்பிரைசஸ், ஸ்ரீலெட்சுமி எக்ஸ்பிலோசிங் கம்பெனி மற்றும் நிறுவன ஊழியர்கள் மீது மேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications