ஏற்காடு தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பெருமாள் மாரடைப்பால் மரணம்

ஏற்காடு (எஸ்.டி.) தொகுதியில் கடந்த 1989-ம் ஆண்டில் அதிமுக ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமாள், கடந்த 1991 - 1996 வரையிலான காலகட்டத்திலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் திமுக வேட்பாளர் சி.தமிழ்ச்செல்வனை எதிர்த்துப் போட்டியிட்ட பெருமாள், சுமார் 37,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.
பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெருமாளுக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
ஏற்காடு எம்.எல்.ஏ. மறைந்த தகவலைக் கேள்விப்பட்டதும் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் மருத்துவமனைக்கு சென்று மறைந்த எம்.எல்.ஏ.வின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பெருமாளுக்கு பி.சரோஜா என்ற மனைவியும் ராஜேஷ் கண்ணா, சுரேஷ் கண்ணா, சதீஷ், கார்த்திக் ஆகிய மகன்களும் உள்ளனர்.
ஆத்தூர் வட்டம் தும்பல் அருகேயுள்ள பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பெருமாள், கடந்த 1977-ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வந்தார். சேலம் கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலர், ஏற்காடு தொகுதி செயலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வகித்து வந்துள்ளார்.
நேரில் அஞ்சலி செலுத்துகிறார் ஜெ.
பெருமாள் மறைவுத் தகவல் கிடைத்ததும், கொடநாட்டில் முகாமிட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து பாப்பநாயக்கன் பட்டிக்குப் புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications