அமெரிக்காவில் 10 லட்சம் ஒயின் பாட்டில்களை அழிக்க முடிவு: ஆஸி. மது ஆலை அதிரடி
நியூயார்க்: காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ள 10 லட்சம் ஒயின் பாட்டில்களை அழித்து விட போவதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மது ஆலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல மது தயாரிப்பு நிறுவனம் ஒன்று 'டிரெஷிரி ஒயின் எஸ்டேஸ்', 'பென்ஃபோல்ட்ஸ்', 'உல்ஃப் பிளாஸ்', 'ரோஸ்மவுண்ட்' போன்ற உலகப் புகழ் பெற்ற மது வகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
பொதுவாக காலம் கடந்து குடிக்கும் போது தான் ஒயின்கள் அதிக மணமும் சுவையும் பெற்றிருக்கும் என நம்பப் படுவதுண்டு. ஆனால், இது மட்ட ரக ஒயின்களுக்கு பொருந்தாது. இந்நிலையில், ஆஸ்திரேலிய மது தயாரிப்பு நிறுவனத்தின் பிரபல் தயாரிப்பு ஒயின் பாட்டில்கள் லட்சக் கணக்கில் அமெரிக்க மது பானக் கடைகளில் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.
அவற்றின் காலாவதி தேதி நெருங்க இருப்பதால், அவற்றை அழித்து விட அந்நிருவனம் முடிவு செய்துள்ளது. காலாவதியாகும் நிலையில் உள்ள ஒயின் பாட்டில்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 லட்சத்தைத் தாண்டும் எனச் சொல்லப் படுகிறது.
ஆனால், ஒயின் பாட்டில்களை அழிக்கும் ரகசியம் குறித்து விவரம் வெளியிட அந்நிறுவனம் மறுத்து விட்டது. அவை கால்வாயில் ஊற்றி அழிக்கப்படலாம் அல்லது பள்ளம் தோண்டி புதைக்கப்படலாம் என தெரிகிறது.
காலாவதியான தங்களது தயாரிப்புகளை மக்கள் உட்கொண்டால் அவர்களுக்கு தங்களது தயாரிப்புகளின் மீது நம்பிக்கையின்மை ஏற்படும் என்பதற்காகவே இந்த முடிவு செய்யப் பட்டதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது..