190 மெ.வா மின்சாரத்துக்காக மக்கள் உயிரை பணயம் வைப்பதா? வைகோ கேள்வி
கூடங்குளம் அணுஉலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அணுஉலை எதிர்ப்பாளர்கள் பலவழிகளில் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.
அணுஉலை எதிர்ப்பாளர்கள் இன்று சென்னையில் பாத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர். அப்போது வைகோ கூறியதாவது:
கூடங்குளத்தில் 600 மெ.வா மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதில் 75 மெ.வா கூடங்குளம் அணுஉலையிலே செலவிடப்பட்டு விடும். மீதமுள்ள 525 மெ.வா மின்சாரத்தில் 45% அதாதவது 236 மெ.வா மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்படும். அதிலும் மின்சாரத்தை டிரான்ஸ்மிட் செய்யும் போது ஏற்படும் இழப்பிற்குப் பிறகு வெறும் 190 மெ.வா மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு கிடைக்கும். எனவே கூடங்குளம் மின்சாரம் தமிழகத்தின் மின்தேவையை பூர்த்தி செய்யும் என்பது மாயை.
அணுஉலைக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் கடந்த 2 வருடங்களாக போராடி வருகின்றனர். இதில் லட்சக்கணக்கான மக்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட இதுபோல யார்மீதும் வழக்கு போடப்படவில்லை.
ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பின்னர் பல நாடுகள் பாடம் கற்றுக் கொண்டு விட்டன. ஆனால் நாம்தான் இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை எனவே அணுஉலையை செயல்பட அனுமதிப்பது தென்தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு என்றைக்கும் ஆபத்துதான்.
பல ஆபத்துக்களை கடந்த வெறும் 190 மெ.வா மின்சாரம் மட்டும் பெறுவதில் என்ன லாபம் என்று வைகோ கேள்வி எழுப்பினார். மேலும் கூடங்குளம் அணுஉலையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் கடலில் கலக்கப்பட்டால் கடல் வாழ் உயரினங்களும் பவளப்பாறைகளும் அழியும். மேலும் அணுக்கழிவுகளை எங்கே கொட்டப்போகிறார்கள் என்று மத்திய அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.