சென்னை மாணவி ஜார்ஜினாவின் உடல் லண்டனில் இன்று மறுபரிசோதனை
லண்டன்: இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த சென்னையை சேர்ந்த மாணவி ஜார்ஜினாவின் உடல் இன்று மறு பரிசோதனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் எஸ்.தாம்சன் என்பவரின் மகள் ஜார்ஜினா தாம்சன். இவருக்கு விண்வெளி வீராங்கனை கல்பானா சாவ்லா போன்று விண்வெளி ஆய்வில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே இருந்து வந்தது. மிகவும் புத்திசாலி பெண்ணான ஜார்ஜினா, லண்டனில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஏரோஸ்பேஸ் இன்ஜியரிங் படிப்பில் சேர்ந்தார்.
இந்நிலையில், ஜூலை 12ம் தேதி பல்கலைக்கழக விடுதியில் தான் தங்கி இருந்த அறையில் ஜார்ஜினா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகள் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து தாம்சன் சென்னையில் இருந்து லிவர்பூல் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், ஜார்ஜினாவின் உடலை பார்க்க தாம்சன் 2 நாள் வரை அனுமதிக்கப்படவில்லை.
தாம்சன் சந்தேகம்
தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாம்சன் தெரிவித்தார். ஜார்ஜினா தங்கியிருந்த அறையில் மின்விசிறியோ அல்லது இரும்பு வளையமோ ஏதும் இல்லை. அப்படி இருக்கும் போது, அவள் எவ்வாறு தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும். துணி வைக்கும் 2 அலமாரிகள் மட்டுமே அங்கு உள்ளது. அவள் என்னை விட அதிக உயரமும் கிடையாது. அப்படி இருக்கும் போது அவள் தூக்கிட்டுக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.
மறு பிரேத பரிசோதனை
மேலும் ஜார்ஜினாவின் மரணத்தின் உண்மை நிலையை கண்டறிய வலியுறுத்தி, லண்டன் நீதிமன்றத்தில் தாம்சன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து ஜார்ஜினாவின் உடல் இன்று மறு பிரேத பரிசோதனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறு பரிசோதனையின் முடிவில் ஜார்ஜினாவின் மரணம் தற்கொலையா என்பது குறித்து விவரம் தெரியவரும். அதனை தொடர்ந்து ஜார்ஜினாவின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லிவர்பூல் பல்கலைக்கழகம்
ஜார்ஜினாவின் மரணம் வருத்தம் அளிப்பதாகவும், போலீசாரின் விசாரணைக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஜார்ஜினாவின் நண்பர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் தங்களின் வருத்தங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் லிவர்பூல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜார்ஜினா தனது குடும்பத்துடன் போதிய தொடர்பில் இருந்ததில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களில் 2 அல்லது 3 இமெயில்கள் மட்டுமே அனுப்பி உள்ளார். கடைசியாக ஏப்ரல் மாதம் ஜார்ஜினா தனது தந்தைக்கு அனுப்பிய இமெயிலில் தான் நலமாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
அடமானத்தில் வீடு
தாம்சன் தனது வீட்டை மகளின் படிப்பிற்காக அடமானம் வைத்து படிக்க வைத்துள்ளார். மகளின் மரணம் குறித்த மர்மங்கள் தீர்க்கப்படும் வரை, ஜார்ஜினாவின் பொருட்களை தான் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என தாம்சன் தெரிவித்துள்ளார். பொருளாதார பற்றாக்குறை சூழ்நிலை காரணமாக, தனது மகளின் உடலை கொண்டு வர நிதியுதவி செய்யுமாறு இந்திய தூதரகத்தை அணுக தாம்சன் முடிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications