மருத்துவப்படிப்பு பொது நுழைவுத்தேர்வு ரத்து: மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அகில இந்திய மருத்துவ கவுன்சில், எம்.பி.,பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ, பல் மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு முறையை கொண்டு வந்து அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 115 வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்து வந்த தலைமை நீதிபதியாக இருந்த அல்டமாஸ் கபீர், நீதிபதி விக்ரமஜித் சென், ஏ.ஆர்.தவே ஆகியோரைக் கொண்ட அமர்வு, மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வினை ரத்து செய்து வியாழன்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
இதில் அல்டமாஸ் கபீர், நீதிபதி விக்ரமஜித் சென் ஆகிய 2 பேரும் அகில இந்திய ரீதியிலான பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராகவும், நீதிபதி ஏ.ஆர்.தவே, ஆதரவாகவும் தீர்ப்பு அளித்தனர்.
பெரும்பான்மை காரணமாக, நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர். இந்த நிலையில், பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்து கூறிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், தங்களை இந்த தீர்ப்பு மனவருத்தமடையச் செய்துள்ளதாக தெரிவித்தார். எனவே இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications