பாஜக பிரமுகர் கொலை: தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க.வினர் கைது
சென்னை: சேலத்தில் பா.ஜ.க. மாநில செயலாளர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சேலம், திருப்பூர் தென்காசியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில் நேற்று இரவு பா.ஜ.க. மாநில செயலாளர் ரமேஷ் சில மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து சேலத்தில் அங்கு முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. முக்கிய வர்த்தகப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க வினர் சிந்தாமணி அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு திருப்பூரில் கடையடைப்பு
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு பேருந்து நிலையம் அருகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பா.ஜ.க வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரிலும் இன்று வர்த்தக பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரத்தில் தடை
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் கூறியதையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர், சாலையில் படுத்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னை, திருச்சி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசியில் மறியல்
தென்காசியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு
மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் குமரேச சீனிவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும்,பஸ் மறியலும் நடைப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து ஹிந்து மதத்தினர் தாக்கப் பட்டு வருவதற்குப் பொறுப்பேற்று தமிழக அரசு ராஜினாமா செய்யவேண்டும்,தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை அமல் படுத்த வேண்டும்.என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப் பட்டன. பின்னர் 50க்கும் மேற்ப்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு
பாஜக பிரமுகர் படுகொலையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications