Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கச்சத் தீவும், "கச்சடா” கேள்வியும்: ஜெ.க்கு கருணாநிதி பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கச்சத்தீவை தாரைவார்க்க தாம் உடந்தையாக இருந்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.

1974ஆம் ஆண்டு இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மவுனமாக இருந்தார். இப்போது உச்சநீதிமன்றத்தில் திடீரென வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் கருணாநிதி என்னென்ன செய்ய தவறியிருந்தார் என்றும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜெயலலிதாவின் இந்த அறிக்கைக்கு பதிலடியாக மிக நீண்ட அறிக்கை ஒன்றை கருணாநிதி இன்று வெளியிட்டுள்ளார். "கச்சத்தீவும் கச்சடா கேள்வியும்" என்ற தலைப்பிலான கருணாநிதியின் அறிக்கை விவரம்:

தமிழக மக்கள் இளிச்சவாயர்களா?

தமிழக மக்கள் இளிச்சவாயர்களா?

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் ஜெயலலிதா கொடைநாட்டிலே ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார்" என்று எங்கே பத்திரிகைக்காரர்கள் எழுதிவிடப் போகிறார்களோ என்பதற்காக, அன்றாடம் ஏதாவதொரு அறிக்கையை அவர் பெயரால் நாளேடுகளில் வருமாறு பார்த்துக் கொள்கிறார். கொடைநாட்டில் அமர்ந்து கொண்டு, அதிகாரிகளோடு கலந்தாலோசித்து, அம்மையார் அறிக்கை களைத் தயாரித்து அனுப்புகிறார் என்று தமிழ் நாட்டு மக்கள் எண்ணிக் கொள்ள வேண்டுமாம்! தமிழ்நாட்டு மக்கள் என்ன அவ்வளவு இளித்தவாயர்களா என்ன? அவர்களுக்கு உண்மை தெரியாதா என்ன?

அறிக்கைக்கு ‘பொருள்’ கிடைக்கவில்லை

அறிக்கைக்கு ‘பொருள்’ கிடைக்கவில்லை

அந்த வரிசையிலே தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு விற்பனை குறித்தும், அந்தத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றியும் அறிக்கை மூலமாகவே தீர்த்து வைத்த நமது முதல் அமைச்சருக்கு நேற்றையதினம் அறிக்கை விடுவதற்குப் பொருள் கிடைக்க வில்லை போலும்!

எட்டு பக்க அறிக்கை

எட்டு பக்க அறிக்கை

அது மாத்திரமல்ல; 17ஆம் தேதிய நாளேடுகளில் எல்லாம் - "இந்து" நாளிதழ் உட்பட, "கச்சத்தீவினைத் திரும்பப் பெறுவது பற்றி உச்ச நீதி மன்றத்தில் நான் தொடுத்த வழக்கினை உச்ச நீதி மன்றம் ஏற்றுக் கொண்டு மத்திய அரசினைப் பதில் கூறுமாறு உத்தரவிட்டுள்ளது" என்று விரிவாகச் செய்தி வெளி யிட்டதைப் பார்த்தவுடன், பொறுக்க முடியவில்லை! எடுத்தார் பேனாவை; எழுதித் தள்ளி விட்டார் எட்டு பக்கத்திற்கு கச்சத்தீவு பிரச்சினையில் நான் துரோகம் செய்து விட்டதாக! இந்தப் பிரச்சினையில் நான் துரோகம் செய்து விட்டதாக "அம்மையார்" இதுவரை எத்தனை முறை அறிக்கை விடுத்திருக்கிறார் என்று எண்ணித் தான் பார்க்க வேண்டும்! ஒவ்வொரு முறையும், கச்சத்தீவினை நானும், மத்திய அரசும் சேர்ந்து கொண்டு தாரை வார்த்து விட்டதாக புகார்களை அடுக்கத் தொடங்கி விடுவார்!

தொடரும் அவதூறு

தொடரும் அவதூறு

முதலமைச்சர் மீது எதிர்க்கட்சிக்காரர்கள் யாராவது பேசினால் போதும்; உடனே "அவதுhறு வழக்குகள்" பாய்ந்து வரும். ஆனால் அவர் எதிர்க்கட்சிக் காரர்களைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் அவதூறாகப் பேசுவார். அதைப் பற்றி யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. கருணாநிதியின் முதல் துரோகம், இரண்டாவது துரோகம், மூன்றாவது துரோகம் என்று பட்டியல் போடுவார்; கபட நாடகங்கள் என்பார்; கண்துடைப்பு நாடகங்கள் என்பார்; சுய நலம் என்பார்; கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்; ஒப்புக்கு சப்பாணி என்பார்; இதெல்லாம் அவரது அரசியல் பண்பாட்டில் பிறந்து அடிக்கடி பயன்படுத்தும் "அழகு தமிழ்ச் சொற்கள் (?) அவருக்கே வழக்கில் வந்த வார்த்தைகள்! இத்தனை பக்கங்கள், இவ்வளவு கடுமையானது;ம கசப்பானதுமான அர்ச்சனைகளை முதலமைச்சர் ஜெயலலிதா என் மீது வாரி இறைத்திருக்கிறாரே; என்ன காரணம்?

நான் செய்தது வழக்கு தொடர்ந்துதான்!

நான் செய்தது வழக்கு தொடர்ந்துதான்!

கச்சத் தீவில் அவர் எதுவுமே செய்ய வில்லை என்று நான் எழுதினேனா என்றால் இல்லை! அவர் பிரச்சினைக்கே நான் செல்லவில்லை. நான் செய்ததெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் கச்சத் தீவு பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வழக்கு தொடுத்தது தான்! அது கூடக் குற்றம் இல்லை. அந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் ஏற்கப்பட்டு, அதைப்பற்றிச் செய்தி ஏடுகளில் வெளி வந்து விட்டது. அவரைப் பற்றிய செய்திகள் தவிர, என் தொடர்பான செய்திகள் வரலாமா?

எனக்கு அர்ச்சனை

எனக்கு அர்ச்சனை

எப்படியோ கச்சத் தீவில் நான் துரோகம் செய்து விட்டதாக முதலமைச்சர் எட்டு பக்க அறிக்கை விடுத்தபிறகு, அதற்கு நான் விளக்கம் அளிக்க வேண்டாமா? கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 3-5-2013 அன்று திடீரென்று கச்சத் தீவுப் பற்றி பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீர்மானத்தை முன் மொழிந்து, அவரே அந்தத் தீர்மானத்தின் மீது நீண்ட நேரம் பேசி நிறைவேற்றப்பட்டது. அந்த உரையில்; தொடக்கம் முதல் முடிகின்ற வரையில் எனக்குச் செய்யப்பட்ட "அர்ச்சனை" தான்!

டெசோ கூட்டமே காரணம்!

டெசோ கூட்டமே காரணம்!

அப்போது திடீரென்று கச்சத்தீவு பற்றிய தீர்மானம் அம்மையாருக்கு எப்படி நினைவுக்கு வந்தது தெரியுமா? 15-4-2013 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற "டெசோ" அமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் காரணம்." அந்தத் தீர்மானத்தின் இறுதியாக "1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், "டெசோ" அமைப்பின் மூலம் உச்ச நீதி மன்றத்தை அணுகுவதென முடிவெடுக்கப்பட்டது" என்று குறிப்பிட்டது தான் காரணம்.

வழக்கு தொடுத்தது துரோகமா?

வழக்கு தொடுத்தது துரோகமா?

கச்சத்தீவில் நான் துரோகம் செய்து விட்டதாக அறிக்கை விட்ட அம்மையாரைக் கேட்கிறேன்; கச்சத்தீவை மீட்பதற்காக நான் எதுவுமே செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறீரே, தற்போது அம்மையாரின் கோபத்திற்குக் காரணமான உச்ச நீதி மன்ற வழக்கை இந்தக் கச்சத் தீவினை மீட்க வேண்டும் என்பதற்காகத் தானே நான் தொடுத்துள்ளேன். இதுவும் ஒரு துரோகமா?

22 வருஷமா என்ன கிழிச்சார்?

22 வருஷமா என்ன கிழிச்சார்?

"கச்சத் தீவை மீட்டே தீருவேன்" என்று அம்மையார் ஜெயலலிதா அவர்கள் 1991ஆம் ஆண்டு விடுதலை நாள் விழா உரையில் சூளுரைத்ததைப் போல நானா சூளுரைத்தேன்? அவர் சபதம் செய்து தான் 22 ஆண்டுகள் ஓடிவிட்டனவே! என்ன செய்து கிழித்து விட்டார்? 15-8-1991 அன்று ஜெயலலிதா என்ன பேசினார்? "கச்சத் தீவைத் திரும்பப் பெற மத்திய அரசுடன் வாதாடவும், தேவை ஏற்பட்டால் போராடவும் இந்த அரசு தயாராக உள்ளது" என்று முழங்கியது நானா? ஜெயலலிதாவா? அப்படிச் சவால் விட்டு விட்டுத் தற்போது என்னைப் பார்த்து, ஏன் போராடவில்லை என்றும், துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை என்றும் குற்றம் சாட்டுவது என்ன வகை நியாயம்?

கச்சத்தீவு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்

கச்சத்தீவு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்

20-4-1992 அன்று இதே சட்டப் பேரவையில் ஜெயலலிதா பேசும்போது, "கச்சத் தீவை மீட்க வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இங்கே நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினோம். ஆனால், கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை" என்று கச்சத்தீவுப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதைப் போலக் கூறியது உண்டா? இல்லையா? அவரே பேரவையில் அவ்வாறு பேசி விட்டு, கச்சத் தீவை மீட்பதற்கு நான் எதுவும் செய்யவில்லை என்று அறிக்கை விடுவதற்கு என்ன பெயர்?

தாரை வார்க்க உடன்படவில்லை

தாரை வார்க்க உடன்படவில்லை

நேற்றையதினம் ஜெயலலிதா கச்சத்தீவு பிரச்சினை பற்றி என்மீது கூறிய குற்றச்சாட்டுகளை எல்லாம், இரண்டு மாதங்களுக்கு முன்பு பேரவையிலே அவர் பேசிய போதே; நான் அவரது குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமாக பதில் எழுதியிருந்தேன். அந்தப் பதிலிலேயே கச்சத் தீவைத் தாரை வார்க்க தி.மு.க. எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவும் இல்லை, தாரை வார்க்க உடன்படவும் இல்லை. தி.மு. கழகத்தைப் பொறுத்து மாத்திரமல்ல, தி.மு. கழக ஆட்சியைப் பொறுத்தும் பல நேரங்களில் கச்சத் தீவு பிரச்சினையை எழுப்பி கச்சத் தீவை மீட்டுக் கொடுங்கள் என்று கேட்கத் தவறியதும் இல்லை. கச்சத் தீவிலே மீனவர்களுக்கு உள்ள உரிமை பாதிக்கப்படுவதை எடுத்துக் காட்டி, அந்தப் பாதிப்பை நிவர்த்திக்க வேண்டுமென்று கேட்கவும் கழக அரசு தவறியது இல்லை என்றெல்லாம் விளக்கிய பிறகும், மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா எழுப்பி யிருக்கிறார் என்றால், அது சரியா?

நரசிம்மராவுக்கு எழுதிய கடிதம்-பதில் எங்கே?

நரசிம்மராவுக்கு எழுதிய கடிதம்-பதில் எங்கே?

எனது அந்த விளக்கத்தில் ஒன்றை எழுதியிருந்தேன். 30-9-1994இல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போது பிரதமராக இருந்த திரு. நரசிம்ம ராவ் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், "தீவு நாடான இலங்கைக்கு, இந்தச் சின்னஞ்சிறிய தீவினை (கச்சத் தீவை) இந்திய அரசு பிரித்துக் கொடுத்தது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலே நல்லுறவு நிலவிட வேண்டும் என்பதற்காகத் தான்" - என்று அப்போதும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததை நியாயப்படுத்தி குறிப்பிட்டது உண்டா இல்லையா என்று கேட்டிருந்தேனே, அதற்கு ஏன் இன்று வரை பதிலளிக்கவில்லை.

1974-ல் அனைத்துக் கட்சி கூட்டம்

1974-ல் அனைத்துக் கட்சி கூட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதா தனது உரையில்; "ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே கச்சத்தீவை இந்தியா தாரை வார்க்கப் போவது தெரிந்திருந்தும் ஏன் எந்தவிதமான நடவடிக்கையையும் கருணாநிதி உடனே எடுக்கவில்லை என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதே கேள்வியை இதுவரை ஜெயலலிதா எத்தனை முறை தான் கேட்டிருக்கிறார். ஒப்பந்தம் 28-6-1974 அன்று கையெழுத்தான உடனேயே 29-6-1974 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நான் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அதில் கச்சத் தீவு பற்றித் தீர்மானம் நிறைவேற்றியது உண்மையா இல்லையா?

கையெழுத்திட மறுத்த அதிமுக

கையெழுத்திட மறுத்த அதிமுக

ஆனால் அ.தி.மு.க. அந்தத் தீர்மானத்தை ஆதரித்துக் கையெழுத்திட அப்போதே மறுத்து விட்டது. அதே 29-6-1974 அன்று நான் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இது தான் கச்சத் தீவினை நான் தாரை வார்த்து விட்டேன் என்பதற்கான ஆதாரமா? இது தான் நான் துரோகம் செய்ததற்கான அடையாளமா?

கண்டனப் போராட்டங்கள்

கண்டனப் போராட்டங்கள்

24-7-1974 அன்று கச்சத்தீவு பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது பொய்யா? தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களிலே முதலமைச்சராக இருந்த நானே கலந்து கொள்ளவில்லையா?

பார்லியில். கச்சத்தீவு

பார்லியில். கச்சத்தீவு

23-7-1974 அன்று நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை வந்த போது, "தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்" என்று அப்போது தி.மு. கழக உறுப்பினராக இருந்த நண்பர் இரா. செழியன் குறிப்பிட்டாரா இல்லையா? "தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது ஜனநாயக விரோதப் போக்காகும்" என்று மாநிலங்களவையில் கழக உறுப்பினர் நண்பர் எஸ்.எஸ். மாரிசாமி தெரிவித்தாரா இல்லையா?

சட்டசபையில் கச்சத்தீவு

சட்டசபையில் கச்சத்தீவு

அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்திலேயே, அதாவது 21-8-1974 அன்று பேரவையில் அரசின் சார்பில் என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானம், "இந்தியாவுக்குச் சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவுப் பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவு பற்றி இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து, கச்சத் தீவின் மீது இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது" என்பதாகும். இதெல்லாம் துரோகத்திற்கான ஆதார ஆவணமா?

ஷரத்துகளை சேர்த்தேன் என்ற ஜெ.

ஷரத்துகளை சேர்த்தேன் என்ற ஜெ.

அடுத்து ஜெயலலிதா தனது நீண்ட அறிக்கையில் எடுத்து வைத்திருக்கும் மற்றொரு வாதம் - "1974இல் திரு. கருணாநிதி கச்சத் தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன், பதறிப் போனேன்" என்கிறார். ஆனால் "2013இல் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே இவர் சொல்லித் தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார்" - என்பதாகும். இதே கருத்தினை வார்த்தை மாறாமல் கடந்த மே மாதம் பேரவையில் பேசி, அதற்கும் நான் விரிவான பதிலை அப்போதே எழுதினேன். இருந்தாலும் மீண்டும் நேற்றைய அறிக்கையிலே இதைச் சொல்லியிருக்கிறார்.

ஷரத்துகளை சேர்த்தது திமுக கழக அரசு

ஷரத்துகளை சேர்த்தது திமுக கழக அரசு

15-4-2013 அன்று "டெசோ" சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தான போது, குறைந்த பட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது.

வெறுப்பு விஷத்தை கக்கியவர்..

வெறுப்பு விஷத்தை கக்கியவர்..

மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில், "கருணாநிதி ஆட்சி அதிகாரம் போன பிறகு அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே "டெசோ" அமைப்பைப் புதுப்பித்து, கூட்டங்களை நடத்துவது, தீர்மானம் நிறைவேற்றுவது, உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுப்பது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல், தான் செய்த தவறை மூடி மறைக்கும் முயற்சி" என்றெல்லாம் வெறுப்பு விஷத்தைக் கக்கியிருக்கிறார். நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதுவும் தமிழக மக்களை ஏமாற்றுகின்ற செயல் அல்ல; தமிழ் மக்கள் நலனைக் காப்பாற்றும் செயல்களாகும்.

இதுதான் துரோகச் செயல்

இதுதான் துரோகச் செயல்

"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்" என்று பேரவையில் 16-4-2002 அன்று தீர்மானம் கொண்டு வந்து விட்டு, இப்போது இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறாரே; அது தான் தமிழக மக்களை ஏமாற்றுகின்ற துரோகச் செயல்!

அதுதான் ஏமாற்றுகிற செயல்

அதுதான் ஏமாற்றுகிற செயல்

இலங்கையிலே அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, "போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்" என்று பேரவையில் ஜெயலலிதா முழங்கிவிட்டு, தற்போது இலங்கைத் தமிழர்களுக்காகவும், கச்சத் தீவுக்காகவும் பரிந்து பேசி அறிக்கை விடுகிறாரே, அது தான் தமிழக மக்களை ஏமாற்றுகின்ற செயல்!

ஏன் பதில் இல்லை?

ஏன் பதில் இல்லை?

தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோது கருணாநிதி கச்சத் தீவை மீட்க ஏன் ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை என்று ஜெயலலிதா திரும்பத் திரும்ப கேட்டு வருகிறார். 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலும், 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும், ஏன் இப்போது 2011 முதலும் ஜெய லலிதா தானே ஆட்சியிலே இருக்கிறார், இவர் ஏன் கச்சத் தீவை மீட்கவில்லை என்று நான் கேட்டிருந்தேனே, அதற்குத் தனது நீண்ட அறிக்கையில் ஜெயலலிதா ஏன் பதில் கூறவில்லை?

நானும் வழக்கு தொடுத்துள்ளேன்

நானும் வழக்கு தொடுத்துள்ளேன்

இதே கச்சத்தீவுப் பிரச்சினைக்காக முதலமைச்சர் ஜெயலலிதாவும் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். "டெசோ" அமைப்பின் சார்பில் நானும் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறேன்.

இது ஜெ.... இது கருணாநிதி

இது ஜெ.... இது கருணாநிதி

ஆனால் "தமிழக மீனவர்களுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் திரு. கருணாநிதி உச்ச நீதி மன்றத்தில் கச்சத் தீவு வழக்கைத் தாக்கல் செய்யவில்லை என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்" என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். இது ஜெயலலிதா!

"தமிழக மீனவர்களுக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் தான் ஜெயலலிதா உச்ச நீதி மன்றத்தில் கச்சத் தீவு வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார்; தயவு செய்து நம்புங்கள்!" இது கருணாநிதி!

ஏமாற்ற முடியாதுதான்!

ஏமாற்ற முடியாதுதான்!

"தமிழக மக்களை யாரும் ஒரு போதும் ஏமாற்ற முடியாது" என்கிறார் ஜெயலலிதா; ஆம், உண்மைதான்; தமிழக மக்களை யாரும் ஒரு போதும் ஏமாற்ற முடியாது! தமிழக மக்கள் யாரிடமும் நிச்சயம் ஏமாற மாட்டார்கள். வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்திருப்பவர்கள் தான் தமிழக மக்கள்! என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+