பா.ஜ.க.,மாநில பொதுச்செயலாளர் ரமேஷ் படுகொலை: சேலம், திருப்பூரில் பந்த்... மோடி இரங்கல்

சேலத்தை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் ஆடிட்டர் ரமேஷ், 52. சேலம் மரவனேரி முதல் கிராசில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். மரவனேரி இரண்டாவது கிராசில், பா.ஜனதா கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு 9.30 மணிக்கு வீட்டில் இருந்து, நடந்தே அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.
மர்ம நபர்கள் சிலர், இவரை பின் தொடர்ந்துள்ளனர். ரமேஷ் வழக்கம் போல, அலுவலகத்தின், கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, திடீரென்று மர்ம நபர்கள் அவரை சூழ்ந்து ஆயுதங்களால், கண் இமைக்கும் நேரத்தில், தலை, கழுத்து, கைகள் என சாரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில், ரமேஷ் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அவரை வெட்டிய மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. தகவல் அறிந்து அங்கு திரண்ட பாரதீய ஜனதாவினர், சடலத்தை மீட்கச் சென்ற காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ரமேஷ் படுகொலை பற்றிய தகவல் பரவியதும், சேலத்தின் பல்வேறு இடங்களிலும் பாரதிய ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, 5 பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த படுகொலையை கண்டித்து, சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.
இதனால் காலைமுதலே கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அசாம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி
இதனிடையே ரமேஷ் உடல் பிரேதபரிசோதனைக்குப்பின்னர் பலத்த பாதுகாப்புடன் மரவனேரியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும் 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர்.
ரமேஷ் உடலுக்கு பொன். ராதாகிருஷ்ணன், வெங்கையா நாயுடு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 6 மணியளவில் ரமேஷ் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி இரங்கல்
இந்நிலையில, கொலையாளிகளை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று பா.ஜனதா பிரச்சாரக் குழு தலைவரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு பா.ஜனதா பொதுச்செயலாளர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுதொடர்பாக நேற்று இரவு தமிழ்நாடு பா.ஜனதா தலைவரை தொடர்பு கொண்டு எனது வருத்தத்தை தெரிவித்தேன். மேலும் அவரது மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். அவரை கொலை செய்த குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications