சென்னை: ஆன்–லைன் வர்த்தகம் மூலம் ரூ.2 கோடி சுருட்டிய தாய்–மகள் கைது
சென்னை: ஆன்லைன் வர்தகத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.2 கோடி வரை சுருட்டிய சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வடபழனி, சாலிகிராமம் அழகிரி நகரைச் சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி (வயது 33). இவர் தனது தாயார் லதாவுடன் சேர்ந்து ஆன்லைன் வர்த்தகம் செய்து வந்தார். ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால், 25 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று, ராஜராஜேஸ்வரி விளம்பரப்படுத்தி வந்தார்.
இதை நம்பி நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த கோமதி என்பவர் ரூ.33 லட்சம் ஆன்லைனில் முதலீடு செய்தார். ஆனால் அந்த பணத்திற்கு லாபத்தொகையும் கொடுக்கவில்லை. ரூ.33 லட்சம் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் கோமதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
ஆன்லைன் வர்த்தகம் என்று சொல்லி, ராஜராஜேஸ்வரியும், அவரது தாயார் லதாவும் மோசடி வர்த்தகம் செய்திருப்பது கண்டறியப்பட்டது. இதன்பேரில் அவர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதுபோல் மேலும் பலரிடம் ரூ.2 கோடி வரை சுருட்டி இருப்பதாக புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications