புகலிடம் தேடி இனி வராதீர்கள்... இங்கு இடமில்லை: ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு
வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வருபவர்களுக்கு இனி ஆஸ்திரேலியாவில் இடமில்லை என்று ஆஸ்திரேலியா பிரதமர் கெவின் ருட் தெரிவித்துள்ளார். புகலிடம் தேடி வருபவர்கள் அனைவரும் இனிமேல் அண்டை நாடான பபுவா நியூ கினியாவிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இலங்கை, ஈரான், ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தானில் இருந்து மறுவாழ்வு தேடும் பல அகதிகள் முதலில் தேர்ந்தெடுப்பது ஆஸ்திரேலியா தான். இவ்வாறாக வரும் அகதிகளுக்கு புகலிடமாக இருந்த ஆஸ்திரேலியாவில் இனிமேல் அகதிகளுக்கு இடமில்லை என அந்நாட்டின் பிரதமர் கெவின் ருட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பிராந்திய குடியமர்த்தல் தொடர்பான மிக முக்கியமான ஒப்பந்தம் ஒன்று ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா நாட்டின் தலைவர்கள் இடையே கடந்த வெள்ளியன்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் படி ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுகளில் அடைக்கலம் தேடி வரும் அகதிகள் அனைவரும் ஐ.நா., சபையின் அகதிகள் கூட்டமைப்பின் ஒரு அங்க நாடாக இருக்கும் பப்புவா நியூ கினியாவிற்கு அனுப்பப்படுவர் அவ்வாறாக அனுப்பப்படுபவர்களிடமும் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும். அவர்கள் அகதிகள் என்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு அங்கே தங்க அனுமதி அளிக்கப்படும்.
இதற்காக பப்புவா நியூ கினியாவில் இருக்கும் மனுஸ் தீவுகளில் 3,000 பேரை தங்க வைக்கும் அளவில் அகதிகள் மையம் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் தங்கள் நாட்டில் தஞ்சம் புகும் சாக்கில் சில கடத்தல்காரர்கள் தவறாக ஊடுருவுவது கட்டுப்படுத்தப்படும் என்றும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கடந்த 18 மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் பயணித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததையடுத்து இந்த முடிவு அவசரமாக எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கையை மாற்றம் செய்யும் வகையில் கெவின் ருட் இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும், எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டும், இந்த கெடுபிடிச் சட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு படகுகள் மூலம் ஆபத்தான பயணம் மேற்கொள்வது கட்டுப்படுத்தப்படும் என்றும் பிரதமர் ருட் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications