ரமேஷ் கொலை வழக்கு.. எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஜெ உத்தரவு

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலத்தில் பாரதீய ஜனதா மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த வெறுக்கத்தக்க சம்பவத்துக்கு நான் எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். ஆடிட்டர் ரமேசின் குடும்பத்தினருக்கு எனது இதயபூர்வமான ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்முறை, வன்முறை குற்றங்கள் அரசியல் ரீதியாக இருந்தாலும், மற்ற வகையாக இருந்தாலும் நாகரீக சமுதாயத்தில் அதற்கு இடமளிக்க முடியாது. அது கடுமையான நடவடிக்கைகள் மூலம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.
எனது அரசு சட்டம்- ஒழுங்கை காப்பாற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது. அனைத்து வகை கிரிமினல் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எனது தலைமையிலான தமிழ்நாடு போலீசுக்கு நான் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளேன்.
இந்த விஷயத்தில் எந்த பாரபட்சமும் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன். அவர்கள் எந்த வித தலையீடும் இல்லாமல் தன்னிச்சையாக பணியாற்ற எல்லா சுதந்திரங்களும் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு அமைதியான பகுதியாக நிலவி வருகிறது.
ஜாதி மோதல், இடதுசாரி தீவிரவாதம், மத அடிப்படைவாத வன்முறை போன்றவை இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. சமூக விரோத கும்பல்கள், இயக்கங்கள் போன்றவற்றை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை நான் வற்புறுத்தி கூறுகிறேன்.
கொலைகள், வன்முறைகள், தனிப்பட்ட அல்லது அரசியல் காரணங்களுக்கான வன்முறைகள், சாதி மோதல்கள், தீவிரவாதம் எதன் மூலமும் இந்த மாநிலத்தை சீர்குலைக்க விடமாட்டேன். அரசியல் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகை குற்றங்களையும் தமிழக போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்கி வருகிறார்கள். அடிப்படைவாத வன்முறைகளை தடுப்பதற்காக தமிழ்நாடு போலீசில் சிறப்பு புலனாய்வு குழு செயல்பட்டு வருகிறது.
2011-ம் ஆண்டு திருமங்கலத்தில் பாரதீய ஜனதா தலைவர் அத்வானியை பைப் வெடிகுண்டு மூலம் கொல்ல முயன்ற ஒரு குற்றவாளியை இந்த குழுவினர் கைது செய்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த நிலையில் ஆடிட்டர் ரமேஷ் கொலை தொடர்பாக விரைவாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த சிறப்பு புலனாய்வு குழு வேலூரில் நடந்த இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் கொலையையும் சேர்த்து விசாரிக்கும்.
இந்த குழு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. நேரடி மேற்பார்வையில் செயல்படும். இந்த வழக்குகளை விரைவில் முடிக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் இந்த குழுவுக்கு கூடுதல் படை தேவைப்பட்டாலும் மற்ற வசதிகள் தேவைப்பட்டாலும் செய்து கொடுக்கப்படும்.
தமிழக போலீசார் துறை ரீதியாக மிகவும் திறமையாக செயல்படுபவர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர்களுக்கு இது போன்ற மோசமான குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி நான் உத்தர விட்டிருக்கிறேன். எனவே இதில் சம்மந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று நம்பிக்கையுடன் உள்ளேன் என்று அவர் தெரிவி்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications