பிள்ளைக்குச் செலவு செய்ததை விட மதிமுகவுக்கு செலவு செய்யும் தொண்டர்கள் .. வைகோ உருக்கம்
திண்டுக்கல் தன் பிள்ளைக்கு செலவு செய்ததைவிட இந்த கட்சிக்காக செலவு செய்து வளர்த்து வருகிறீர்கள் என்று மதிமுகவினர் குறித்து கட்சி பொதுச் செயலாளர் வைகோ பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட மதிமுக சார்பில் கழக வளர்ச்சி நிதியளிப்புக் கூட்டம், திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடந்தது.
ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் கழக நிதியாக திண்டுக்கல் மாவட்ட மதிமுக செயலாளர் என்.செல்வராகவன் மற்றும் கட்சியின் பொறுப்பாளர்கள், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிடம் அளித்தனர். பின்னர் வைகோ பேசினார்.

வாளாவிருந்த கருணாநிதி
ஈழ தமிழின படுகொலையை தடுத்திட கோரி தம்பி முத்துக்குமார் தீக்குளித்த போது அன்று முதல்வராக இருந்த கருணாநிதி வாளாவிருந்து விட்டு இன்று டெசோ என்கிறார்.

டெசோ ஒரு ஏமாற்று வேலை
டெசோ ஒரு ஏமாற்று வேலை என்பதை நாட்டு மக்கள் அறிவர்.

20ம் ஆண்டை நோக்கி மதிமுக
மதிமுக 20ஆம் ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களை விட இந்த மாவட்டத்தில் தான் நிதி அதிகமாக வழங்கியுள்ளீர்கள்.

மக்கள் கொடுத்த நிதி
இந்த நிதி மக்கள் கொடுத்த நிதி. இது மக்கள் இயக்கம். இந்த இயக்கம் வளர வேண்டும். வைகோ வளர வேண்டும் என்பதற்காக வாரி வழங்கியிருக்கிறார்கள்.

நாடே மடிப்பிச்சை ஏந்தியுள்ளது
நாடே விடுதலைக்காக மடிப்பிச்சை ஏந்தியிருக்கிறது. காந்தி ஒருமுறை மதுரை வந்தபோது, நெடுமாறன் தந்தையார் கையெழுத்து கேட்டுள்ளார். அதற்கு 5 ரூபாய் கொடு கையெழுத்து போடுகிறேன் என்று காந்தி சொன்னார். உடனே தன்னுடைய தங்க மோதிரத்தை கழட்டி கொடுத்தார். அப்போதும்கூட காந்தி உண்மையான தங்கமா என்று கேட்டார். அதன் பிறகு தான் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் பேப்பர் வாங்கி கையெழுத்துபோட்டு கொடுத்தார்.

அண்ணா காலத்திலும்
அதேபோல் சிங்கப்பூரில் நேதாஜி கலந்து கொண்ட கூட்டத்தில் அங்குள்ள பெண்கள் தங்க செயின் கொடுத்தனர். பெண்கள் தாங்கள் கழுத்தில் மஞ்சள் கயிரை கட்டிக்கொண்டு தங்க தாலியை கொடுத்தார்கள். அண்ணா காலத்தில் கூட கூட்டங்களில் சிறப்பு பேச்சாளர் பேசுவதற்கு முன்பு 'உங்களிடம் துண்டை ஏந்தி வருவார்கள். இயன்ற உதவியை செய்யுங்கள்' என்று சொல்வார்கள். சொன்னதன் பேரில் அவர்கள் கூட்டத்திற்குள் போய் நிதி திரட்டி கூட்ட செலவை ஈடுகட்டுவார்கள். அப்படித்தான் நாமும் மக்களிடம் கேட்கிறோம். நாட்டுக்காக கழகம் செயல்படுகிறது என்ற நோக்கத்தில் மக்களும் வழங்கி வருகிறார்கள்.

சாந்தன், பேரறிவாளன், முருகன் விடுதலைக்காக
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக, ராம்ஜெத்மலானியை வழக்கறிஞராக வைத்து வாதாடியுள்ளோம். இதற்காக டெல்லி, மும்பை என செல்ல வேண்டியிருந்தது. இதற்கான செலவை கழகம் தான் ஏற்றது.

எத்தனையோ நடைப் பயணங்கள்
கடந்த 20 ஆண்டுகளாக சென்னை, காஞ்சி என எத்தனையோ நடைப்பயணங்கள் சென்றிருக்கிறோம். ஒருமுறை செல்லும் நடைப்பயணத்தை வைத்து ஒரு மாநாடு நடத்திவிடலாம். அந்த அளவுக்கு நான் போகும் இடங்களில் எல்லாம் கட்சியினர் கொடி, தோரணங்களை கட்டி செலவு செய்தார்கள்.

பிள்ளைக்கு செலவு செய்ததை விட
தன் பிள்ளைக்கு செலவு செய்ததைவிட இந்த கட்சிக்காக செலவு செய்து வளர்த்து வருகிறீர்கள் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications