சேலத்தில் தீக்குளித்த பாஜக மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் ராஜராஜேஸ்வரி மரணம்
சேலம்: சேலத்தில் பாஜக நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் தீக்குளித்த அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் ராஜராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பாரதி நகரைச் சேர்ந்தவர் ராஜராஜேஸ்வரி(45). பாஜக மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினராகவும், மண்டல மகளிர் அணி தலைவியாகவும் இருந்தார். அவரது கணவர் பாபு. கும்பகோணத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை பிரிவில் இன்ஸ்பெக்டராக உள்ளார். சேலத்தில் பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவர் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் ராஜராஜேஸ்வரி சோகமாக காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று காலை தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிர் இழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications