தீவிரவாதம் அதிகரிக்க அத்வானி ரதயாத்திரைதான் காரணம்: திக்விஜய் சிங் குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷகீல் அகமது, 2002ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரம்தான், இந்திய முஜாகிதீன் இயக்கம் உருவாக காரணம் என தனது ட்விட்டரில் தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜனதா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது .
காங்கிரஸ் கட்சியும் ஷகீல் அகமதுவின் கருத்து அவரது சொந்த கருத்து என்றும், அது கட்சியின் கருத்து அல்ல என்றும் கூறியிருந்தது.
இதனையடுத்து ட்விட்டரில் தான் வெளியிட்ட கருத்து தனது சொந்த கருத்து அல்ல என்றும், தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் உள்ள தகவலையே தான் ட்விட்டரில் பகிர்ந்துகொண்டதாக ஷகீல் அகமது விளக்கம் அளித்தார். இதனை நியாயப்படுத்தும் வகையில் திக் விஜய்சிங் இன்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
எந்த பிரிவினர் தவறு செய்தார்கள் என்று தீவிரவாதத்திற்கு சாயம் பூசவோ, நியாயப்படுத்தவோ ஷகீல் அகமது முயற்சிக்கவில்லை. 1980 களில் பா.ஜனதா தலைவர் அத்வானி நடத்திய அயோத்தி ரத யாத்திரைக்கு பின்னர்தான் நாட்டில் தீவிரவாத செயல்பாடுகள் அதிகரித்தது. இதுவரை நடந்துள்ள சம்பவங்களை பார்க்கையில் ஒரேயொரு சமுதாயம் மட்டுமே தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.
பிரிவினைவாதம் என்பதில் பெரும்பான்மை சமுதாய பிரிவினைவாதம், சிறுபான்மை பிரிவினைவாதம் என்று வேறுபடுத்தி பார்க்காமல் அனைவரும் ஒன்றுபட்டு கண்டிக்க வேண்டும்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு சமுதாயம் மட்டும்தான் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுகிறது என்று தொடர்ந்து கூறி உலகை நம்ப வைக்க பா.ஜனதா நினைக்கிறது" என்று திக் விஜய் சிங் கூறியுள்ளார்.