கோவையில் 7.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த நபர் திருப்பதியில் கைது!
கோவை: கோவையில் நகை வியாபாரிகளிடம் இருந்து 7.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த நபரை திருப்பதியில் போலீசார் கைது செய்தனர்.
கோவை ராஜ வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த மும்பை நகை வியாபாரிகள் லலித் ஜெயின், மல்ஹீந்தர் சிங்கிடம் இருந்து 7.5 கிலோ தங்க நகைகள் கடந்த 16ஆம் தேதி கொள்ளை அடிக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், லாட்ஜில் தங்கியிருந்த முருகன் என்பவர் திடீரென மாயமானது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், முருகனின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் முருகன் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அதையடுத்து திருப்பதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கே முருகனை பிடித்து விசாரித்தனர்.
அப்போது தங்கத்தை திருடியதை முருகன் ஒப்புக்கொண்டார். உடனே, அவரை கைது செய்து அவரிடம் இருந்த 7.5 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.
அடிக்கடி விடுதிகளில் தங்கும் முருகன், தான் தங்கும் விடுதி அறையின் சாவிக்கு டூப்ளிகேட் சாவி போட்டு வைத்துக்கொண்டு, மற்றொரு நாளில் அந்த அறையில் தங்கியிருப்பவர்களின் பொருட்களை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளதும் தெரிய வந்திருக்கிறது.
கைது செய்யப்பட்ட முருகன், சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலரின் மகன் என்பதும் விசாரனையில் தெரிய வந்திருக்கிறது. அவர் தன்னை ஒரு பருப்பு வியாபாரி என கூறி கடந்த ஓரு மாதமாக அந்த விடுதியில் தங்கி இருந்துள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட முருகனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருடுபோன ஒரு வாரத்திற்குள்ளாக திருடனை பிடித்து நகை மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications