முல்லைப் பெரியாறு அணையில் உரிமை உண்டு!: சுப்ரீம் கோர்ட்டில் ஆவணங்கள் தாக்கல் செய்தது தமிழகம்!!
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை நீரை தமிழகம் உரிமை கோர முடியும் என்பதற்கான ஆவணங்களை தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து கேரளாவும் வழக்கு தொடர்ந்து. அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்க தனிச்சட்டத்தை நிறைவேற்றியது கேரளா. இதை எதிர்த்தும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இதைத் தொடர்ந்து முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் ஒரு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.

இறுதி விசாரணை
நீதிபதி ஆனந்த் குழு அணையின் பலம் தொடர்பாக கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் அறிக்கையைத்தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிபதி லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நேற்று இறுதி விசாரணை தொடங்கியது.

உரிமை உண்டா?
அப்போது 1886-ம் ஆண்டு இந்திய அரசுக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையேதானே முல்லைப் பெரியாறு அணை நீரை பகிர்வது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது.. இதில் தமிழகம் எப்படி உரிமை கோர முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உரிமை உண்டு
இதற்கு பதிலாக, 1935ஆம் ஆண்டு சட்டப்படி தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணை நீரை உரிமை கோர முடியும் என்று வாதிடப்பட்டது.

அணைக்கு பாதிப்பு- கேரளா
கேரள தரப்பிலோ அணை பலவீனமாக இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டால் அணை உடைந்துவிடும். இதனால் புதிய அணை கட்ட வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

தமிழகம் மறுப்பு
இதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அணை பலமாக இருக்கிறது. நிலநடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு இல்லை.. புதிய அணை கட்ட தேவையில்லை என்று வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்றும் விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் கூறினர்

2வது நாள் விசாரணையில் காட்டம்
இன்று காலை மீண்டும் விசாரணை தொடங்கிய போது, நேற்றைப் போலவே முல்லைப் பெரியாறு அணையின் நீரை தமிழகம் எப்படி உரிமை கோர முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் தமிழக அரசுத் தரப்பு நினைத்தால் தங்களுக்கான உரிமை உண்டு என்பதற்கான ஆவணங்களை உடனே தாக்கல் செய்ய முடியும். ஆனால் ஏன் தமிழக அரசு தரப்பு அப்படி செய்யவில்லை? என்று கேள்விக் கணைகளை அடுக்கினர்.

தமிழகம் பதில்
இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 1886-ம் ஆண்டு இந்திய அரசுக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டாலும் 1935ஆம் ஆண்டு சட்டப்படி இந்த உரிமையானது சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு தானாகவே வந்துவிடும் என்று சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னர் 1935 ஆம் ஆண்டு சட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆவணங்கள் தாக்கல்
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 1858, 1915,1935 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் தமிழகத்துக்கு முல்லைப் பெரியாறு அணையில் உரிமை உண்டு என்பதற்கான ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications