பொதுக்கூட்டங்களுக்கு செல்ல வேண்டும்: முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்துங்கள்- விஜயகாந்த் மனு

இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
நாகர்கோவில் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட 2 வழக்குகளில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எனக்கு முன்ஜாமீன் அளித்தது. அதில், நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்து தலா ரூ.10 ஆயிரத்துக்கு 2 நபர் சொத்து ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், சென்னை பெருநகர் தலைமை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
வர இருக்கும் மக்களவைத் தேர்தல் தொடர்பான கட்சிப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல வேண்டியுள்ளது. என் மீது தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் 23 வழக்குகள் இருப்பதால் அவற்றிலும் ஆஜராக வேண்டியுள்ளது.
சென்னை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். மேலும், நீதிமன்றங்களில் ஆஜராவதிலும் சிக்கல் ஏற்படும்.
எனவே, முன்ஜாமீன் நிபந்தனையை பின்வருமாறு தளர்த்த வேண்டும். நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜராகி இருநபர் ஜாமீன் அளிப்பதற்கு பதில், சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் அளிக்க உத்தரவிட வேண்டும்.
மேலும், சென்னை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆர். மாலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications