தொடரும் சர்ச்சையில் அல்டமாஸ் கபீர்! தலைமை நீதிபதி சதாசிவம் அதிரடி உத்தரவு!!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அல்டமாஸ் கபீர் அண்மையில் ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த சதாசிவம் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவர் தொடர்ந்தும் நீதித்துறை நேர்மை பற்றி விரிவாக பேசி வரும் நிலையில் அல்டமாஸ் கபீர் தமது பதவி காலத்தில் பாரபட்சமாக நடந்து கொண்ட வழக்குகளில் புதிய உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொழிலதிபர்களுக்கு ஆதரவு
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் ஜி.எஸ்.சிங்வி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இவர்கள்தான் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான அனைத்தையும் விசாரித்து வருகின்றனர்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் புதிய திருப்பமாக உரிமம் பெற்ற நிறுவனங்களின் அதிகாரிகளைப் போல உரிமையாளர்களையும் வழக்கில் சேர்த்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி. இதில் முதலில் ஏர்டெல் சுனில் மித்தர்ல், எஸ்ஸார் ரவி ரூயா ஆகியோர் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பினார் நீதிபதி சைனி.
உடனே இவர்கள் உச்சநீதிமன்றத்தில் சம்மனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தனர். முறைப்படி இம்மனுக்கள் சிங்வி பெஞ்சுக்கு போயிருக்க வேண்டும். ஆனால் தலைமை நீதிபதியாக இருந்த அல்டமாஸ் கபீரோ தம்முடைய பெஞ்ச் மூலமே விசாரித்து இந்த இரு தொழிலதிபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கும் அளித்து தீர்ப்பளித்தார். இது நடைமுறைக்கு மாறானது.
அல்டமாஸ் கபீர் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் தலைமை நீதிபதி சதாசிவம் முன்பும் ஸ்பெக்ட்ரம் வழக்குகள் விசாரணைக்கு வந்தது. ஆனால் அல்டமாஸ் கபீரைப் போல் செயல்படாமல் முறைப்படி நீதிபதி சிங்வி பெஞ்சுக்கே ஸ்பெக்ட்ரம் வழக்குகளை அனுப்பி வைத்துவிட்டார் சதாசிவம்.
இது உள்ளேயே நடைபெற்ற அதிரடி எனில் பகிரங்கமாகவே அல்டமாஸ் கபீர் அளித்த தீர்ப்பு பாரட்சம் என்று விமர்சனமே செய்திருக்கிறார் சதாசிவம் ஒரு வழக்கில்...
ஹிமாச்சல பிரதேச வழக்கு
ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த 2012ம் ஆண்டு சிமெண்ட் ஆலை கட்டுவதற்காக ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தவறான தகவல்களை அளித்து தகுதிச் சான்றிதழ் பெற்றது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஹிமாச்சல பிரதேச உயர்நீதிமன்றம் அந்நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு மார்ச் 4ம் தேதி ரூ.100 கோடி அபராதம் விதித்து 4 தவணைகளாக செலுத்த உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மனு மீது நவம்பர் 26ம் தேதி நீதிபதி பட்நாயக் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி ஹிமாச்சல் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது.
பின்னர் இந்த ஆண்டு பிப்ரவர் 4 மற்றும் ஏப்ரல் 17 ஆகிய தேதிகளில் இதே மனு தலைமை நீதிபதியாக இருந்த அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வர அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. மே 8ம் தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போதும் அபராத தொகையை செலுத்துவதற்கான காலக்கெடுவை அல்டமாஸ் கபீர் பெஞ்ச் நீட்டித்தது.
இதைத் தொடர்ந்து ஜூலை 10ம் தேதி விசாரணையின் போது ஜூலை 23ம் தேதிக்கு வழக்கு வைக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் அந்த தனியார் நிறுவனம் அபராத தொகை செலுத்த வேண்டிய காலக்கெடுவும் தள்ளிக்கொண்டே போனது.
கடைசியாக அல்டமாஸ் கபீர் ஓய்வு பெற்றுவிட கடந்த 23ம் தேதியன்று தலைமை நீதிபதி சதாசிவம் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பரபட்சமாக தவறான தீர்ப்பு அளிக்கப்பட்டதாகவும், இப்படி தீர்ப்பு அளித்திருக்க கூடாது எனவும் சதாசிவம் கருத்து தெரிவித்தார்.
அத்துடன் கட்டுமான நிறுவனத்திற்கு நீட்டித்த காலக் கெடுவை ரத்து செய்வதாகவும் அவர் அதிரடியாக உத்தரவிட்டார். தலைமை நீதிபதி சதாசிவத்தின் இந்த அதிரடி உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உறவினரை தலைமை நீதிபதியாக்க முயற்சி
ஏற்கெனவே தாம் ஓய்வு பெறுவதற்கு முன்பாக உறவினர் ஒருவரை எப்படியாவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக்க அல்டமாஸ் கபீர் முயற்சித்தார் என்ற புகாரும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications