மதுரையில் பயங்கரம்.. திருடர்கள் சங்கிலியை அறுத்ததில் கழுத்து அறுபட்டு ஆசிரியை மரணம்
மதுரை: மதுரை கோசாகுளம் பகுதியில் இன்று காலை பட்டப் பகலில் இரண்டு வழிப்பறித் திருடர்கள், ஆசிரியை ஒருவரின் மொபட்டை கீழே தள்ளி விட்டு, அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயன்றனர். இதில் கழுத்து அறுபட்டு அந்த ஆசிரியை பரிதாபமாக மரணமடைந்தார்.
கோசாகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த கொடூரக் கொலை மற்றும் வழிப்பறிச் சம்பவம்.
மேலபாலசிங்காபுரம் விஷால் நகரைச் சேர்ந்தவர் லூயிஸ் பெர்னார்ட். இவர் ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பெயர் ஜெயராணி. 52 வயதான இவர் ஆசிரியை ஆவார். கோசாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். தினமும் தனது மொபட்டில் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.
இன்று காலையும் வழக்கம் போல பள்ளிக்குப் புறப்பட்டார் ஜெயராணி. அப்போது அவரைப் பின் தொடர்ந்து இரண்டு பேர் பைக்கில் வந்துள்ளனர். பனங்காடி என்ற இடத்தில் வந்தபோது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தங்களது பைக்கால், ஜெயராணியின் மொபட்டை இடித்துள்ளனர். இதில் ஜெயராணி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
பின்னர் அவரது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயன்றனர். ஆனால் ஜெயராணி சங்கி்லியை கெட்டியாக பிடித்துக் கொண்டு குரல் எழுப்பியபடி போராடினார். திருடர்கள் விடவில்லை. பலம் கொண்டு சங்கிலியை பறித்துள்ளனர். இதில் கழுத்து அறுபட்டு விட்டது. ரத்த வெள்ளத்தில் சிறிது நேரத்தில் ஜெயராணி பரிதாபமாக உயிரிழந்து போனார்.
இந்த சம்பவத்தைப் நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த திருடர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெறும் 2 பவுன் தங்கச் சங்கிலிக்காக ஆசிரியை ஒருவரின் உயிரைப் பறித்த அந்த கொலைகார திருடர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications