இஃப்தார் விருந்து ரத்து, மோடி விவகார அறிக்கை.. பாஜக பக்கம் சாய போட்டி போடுகிறதா அதிமுக, திமுக?

கடந்த 15 ஆண்டுகாலமாக இஃப்தார் விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் இஸ்லாமிய தலைவர்களுடன் இணைந்து கொள்வார் ஜெயலலிதா. கடந்த காலங்களில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்த போது இஸ்லாமிய தலைவர்கள் அதிருப்தியில் இருந்த போது இஃப்தார் விருந்தை ஜெயலலிதா நடத்தவில்லை. தற்போது கொடநாட்டில் இருக்கும் ஜெயலலிதா, உதகையிலேயே இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் அதிமுக எம்.எல்.ஏ பெருமாள் மறைந்ததைத் தொடர்ந்து இஃப்தார் விருந்து ரத்து செய்யப்படுகிறது என்று ஜெயலலிதா அறிவித்தார். அமைச்சராக இருந்த மரியம்பிச்சை இறந்த போது சட்டசபை கூட்டத் தொடரை தொடர்ந்தும் நடத்திய தமிழக முதல்வர் இஃப்தார் விருந்தை ரத்து செய்ய எம்.எல்.ஏ.வின் மறைவை முன்னிட்டு ரத்து செய்ததாக கூறுவது ஏற்புடையது அல்ல என்கின்றனர் இஸ்லாமிய தலைவர்கள் ... அப்புறம் என்ன காரணம் இருக்க முடியும்?
பாஜக மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை சம்பவமானது எதிர்பாராத நிகழ்வுகளை அடுத்தடுத்து அரங்கேற்றி வைத்துவிட்டது. தமிழகத்தில் இந்து தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பிரசாரத்தை முன்னெடுக்க வைத்தது. பாரதிய ஜனதாவின் நட்பு கட்சியாக செயல்படுகிற அதிமுகவுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்.
லோக்சபா தேர்தலில் பாஜக சார்பு அணியாக அறியப்பட்டு வரும் அதிமுகவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை தவிர்க்க வேறு வழி என்ன? இந்து இயக்க தலைவர்கள் துயரமான சூழலில் இருக்கும் நிலையில் இஸ்லாமியர்களுடன் இணைந்து இஃப்தார் விருந்து கொண்டாடுவதை அவர்கள் ஏற்கமாட்டார்கள்தானே? இதுவும் நல்லதுதான் என நினைத்து இஃப்தார் விருந்தை ரத்து செய்து சற்றே விலகிப் போன பாஜக உறவை தம் பக்கம் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார் முதல்வர் ஜெயலலிதா..
சரி திமுக தலைவர் கருணாநிதி திடீரென மோடி விவகாரத்தில் அறிக்கை விட வேண்டிய அவசியம் என்ன? வி.பி.சிங் ஆட்சி காலத்திலேயே பாரதிய ஜனதா ஆதரவுடன் ஆட்சியில் பங்கேற்றதுதான் திமுக. எதிர்வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவலாம்.. பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கலாம் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகிய நிலையில் திமுக தலைமை அப்படி ஒன்றும் பாஜகவை பகிரங்கமாக எதிர்த்துக் கொள்ள விரும்பவில்லை என்பதையே மோடி விவகார அறிக்கை சொல்லி நிற்கிறது.
லோக்சபா தேர்தலில் ஒருவேளை பாரதிய ஜனதா கூடுதல் இடங்களைப் பெற்றுவிட்டால் அந்த அணிக்கு தாவ ஒரு ஜன்னல் தேவை என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் திமுக தலைமை இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஆக தமிழ்நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளுமே அணி சேர்க்கைக்கான ஒத்திகையை ஒவ்வொரு அரசியல் பிரச்சனைகளிலும் தொடர்ந்தும் நடத்தி வருகின்றன என்பதே நிதர்சனம்!












Click it and Unblock the Notifications