சாலை மேம்பாட்டுக்கு ஜெ. ரூ.2,950 கோடி நிதி ஒதுக்கியது புதிய அறிவிப்பாக தெரியவில்லையே: கருணாநிதி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சாலை அகலப்படுத்துதல், சாலைக் கட்டமைப்பின் தரம் மற்றும் திறன் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக 2,950 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றால்; இது புதிய அறிவிப்பா?. அல்லது நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளதாக எழுதியிருந்தார்களே, அதே அறிவிப்பினை மீண்டும் ஒரு முறை செய்திருக்கிறார்களா?.
புதிய அறிவிப்பு இல்லை என்றால், நிதிநிலை அறிக்கையிலே இவ்வாறு அறிவித்திருந்தோம், அதற்கான அறிவிப்பு என்று கூறியிருக்க வேண்டாமா?. இது புதிய அறிவிப்பு என்றால், நிதிநிலை அறிக்கையிலே கூறப்பட்ட திட்டங்கள் எல்லாம் இந்த நான்கே மாதங்களில் நிறைவேற்றி முடிக்கப்பட்டு விட்டனவா?.
இவ்வளவு பெரிய தொகைக்கான திட்டங்களை அறிவிக்கின்றபோது, அந்தத் திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல்பெற வேண்டாமா?. 2013-14-ம் ஆண்டிற்கு, சாலைப் பராமரிப்பிற்காக 1,088 கோடி ரூபாய் முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று இந்தத் துறையின் அமைச்சர் பேரவையிலே அறிவித்தார்.
இப்போது முதல்-அமைச்சர் மாநில நெடுஞ்சாலைத் துறையின் மூலம் 1,021 கோடியே 26 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்தத் தொகை அமைச்சரின் அறிவிப்பின் கீழ் வருமா?. அல்லது அமைச்சர் ஒதுக்கியதாக அறிவித்ததை அன்னியில் வேறு கூடுதலான ஒதுக்கீடா?.
முதல்-அமைச்சரின் நேற்றைய அறிக்கையில் ‘‘இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2950 கோடி ரூபாய்'' என்று குறிப்பிட்டிருப்பதால், ஏற்கனவே ஒதுக்கப்பட்டதை அன்னியில் இது புதிய அறிவிப்பாகத் தோன்றவில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications