அனுமதியில்லாமல் இயங்கும் பட்டாசு ஆலைகளை சீல் வைக்க ஹைகோர்ட் உத்தரவு!
மதுரை: அனுமதியில்லாமல் இயங்கும் பட்டாசு ஆலைகளை மூடி சீல்வைக்க விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகாசியை அடுத்த முதலிப்பட்டியில் உள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து வக்கீல் ஆனந்த முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சிவகாசி நடுமுதலிப்பட்டி, "ஓம்சக்தி' பட்டாசு ஆலையில், செப்டம்பர் 5ல் ஏற்பட்ட தீ விபத்தில், 38 பேர் பலியானதாக, அரசு தெரிவிக்கிறது. மேலும் பலர் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது. நிரந்தரமாக, 70 பேர் ஊனமடைந்துள்ளனர். விருதுநகர் கலெக்டர், எஸ்.பி., மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வாளரை, சம்பவத்திற்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில், விசாரணை நடத்த வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு தலா, 30 லட்சம், ஊனமடைந்தவர்களுக்கு, 7 லட்சம், காயமடைந்தவர்களுக்கு, 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ராஜேஸ்வரன், நீதிபதி ஆறுமுகசாமி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
ஆட்சியர் தலைமையில் காவல்துறை, வருவாய்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை, தீயணைப்பு துறையும் இணைந்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் குறிப்பிட்டனர்.
அத்துடன் அனுமதியில்லாத பட்டாசு ஆலைகளுக்கு உடனே சீல் வைக்கவும், ஆய்வு அறிக்கையை வருகிற ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.