சென்னை வேளச்சேரியில் கருணாநிதி நற்பணி மன்றம் திடீர் இடிப்பு
சென்னை: சென்னை வேளச்சேரியில் திமுகவினரால் நடத்தப்பட்டு வந்த கருணாநிதி நற்பணி மன்றத்தின் அலுவலகம் இடித்துத் தள்ளப்பட்டது.
சென்னை வேளச்சேரி 180 வது வட்டத்தில், 37, அண்ணா தெரு, எம்.ஜி.ஆர். நகரில் கருணாநிதி பெயரில் நற்பணி மன்றம் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இந்த மன்றக் கட்டடத்தை அ.தி.மு.க. வட்டச் செயலாளர் ஜோதி முன்னிலையில், சென்னை மண்டலம் 13ற்கு உள்பட்ட உதவி ஆணையாளர் சம்பத் தலைமையிலான அதிகாரிகள் குழு பொக்லைன் மூலம் மன்ற கொடி கம்பம், பெயர் பலகை, மன்றத்தையும் இடித்து தள்ளினார்.
தகவல் அறிந்த பகுதிச் செயலாளர் இந்திராநகர் மு.ரவி, வட்டச் செயலாளர் கோபி ஆகியோர் தலைமையில் திமுகவினர் குவிந்து அதிகாரிகள், போலீசாரிடம் முறையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், மன்றக் கட்டடத்தை இடிக்கக் கூடாது என்று கோரி சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் நகலை அதிகாரி சம்பத்குமாரிடம் கொடுத்தோம். ஆனால் அதையும் மீறி, அதிமுகவினரின் தூண்டுதல் பேரில் கட்டடத்தை இடித்துள்ளனர் என்றனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விளக்குகையில், சட்டப்படி தான் எல்லாவற்றையும் செய்து வருகின்றோம். சட்டத்தை மீறி எதுவும் செய்யவில்லை. செய்யவும் முடியாது. திமுகவினர் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறினால் அவர்கள் நீதிமன்றத்தை தாராளமாக நாடலாம் என்றனர்.












Click it and Unblock the Notifications