ஜெட் ஏர்வேஸ்- எதிஹாட் டீல்.. அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி!

விமானத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அபுதாபியின் எதிஹாட் ஏர்லைன்ஸ், மலேசியாவின் ஏர் ஏசியா ஆகியவை இந்தியாவில் முதலீடு செய்ய முன்வந்தன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் எதிஹாட் ஏர்லைன்ஸும், டாடா நிறுவனத்துடன் ஏர் ஏசியாவும் இணைந்து கொண்டன.
இதில் எதிஹாட்- ஜெட் ஏர்வேஸ் ஒப்பந்தம் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தில் குறைவான பங்குகளை வைத்திருக்கும் எதிஹாட் ஏர்லைன்ஸே அனைத்து முடிவு எடுக்கும் அதிகாரங்களையும் கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டது. இதனால் அன்னிய நேரடி முதலீட்டு வாரியம் இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் இன்று இந்த ஒப்பந்தத்துக்கு நிபந்தனைகளுடன் அன்னிய நேரடி முதலீட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பங்குதாரர்களிடையேயான ஒப்பந்தத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வேண்டுமானால் இந்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம். எந்த பிரச்சனையும் இந்திய சட்டத்தின் கீழ்தான் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜெட் ஏர்வேஸ், எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications