நான் இப்படிப் பேசினா உடனே அதிமுகவுக்கு ஜால்ரான்னு சொல்லிடுறாங்க.. சரத் விசனம்

சென்னையில் காமராஜர் பிறந்த நாள் விழா, கட்சித் தலைவரான சரத்குமார் பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் விழா என முப்பெரும் விழாவை நடத்தியது சமத்துவ மக்கள் கட்சி.
சரத்குமாரை புதிததாக புரட்சித் திலகம் என்ற அடைமொழியிட்டு இந்த விழாவுக்கு வரவேற்றனர் தொண்டர்கள். விழாவில்சரத்குமார் பேசுகையில்,
மாற்றம் வேண்டும் என்று நாம் சொல்லி வருகிறோம். மாற்றம் எளிதாக வருவதல்ல. பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்பது நமது எண்ணம் அல்ல. அனைவராலும் நேசிக்கப்படும்போதுதான் ஒருவனால் தலைவனாக முடியும்.
மாற்றம் என்பது ஒவ்வொருவரின் சிந்தனையிலும் வர வேண்டும். அதற்காக நீங்கள் சிந்திக்க வேண்டும். அதற்கான காலத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நான் மனசாட்சிக்கு கட்டுப்பட்டவன். அதனால், கடவுளை தவிர யாருக்கும் பயப்பட மாட்டேன்.
தமிழகத்தில் நல்லாட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கக் கூடாது. நான் இவ்வாறு பேசினால், அதிமுகவுக்கு ஜால்ரா அடிப்பதாக சொல்வார்கள்.
மக்களுக்கு நல்லது செய்யும்போது அதை பாராட்ட வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நம் இயக்கத்தில் உள்ளவர்கள் உறுதியோடு செயல்பட வேண்டும். நம் கட்சிக்கு என்று ஒரு காலம் உள்ளது. அப்போது நாம் பார்த்துக்கொள்வோம். அதுவரை மக்களின் வளர்ச்சிக்காக செயல்படுவோம்.
செப்டம்பர் மாதம் முதல் நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications