கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி 2வது நாளாக முழு அடைப்பு- ஒருவர் தீக்குளிக்க முயற்சி!
டார்ஜிலிங்க்: தெலுங்கானா போல கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி 2வது நாளாக முழு அடைப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இன்றைய முழு அடைப்பின் போது தனி மாநிலம் கோரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குவங்க மாநிலத்தில் இருந்து டார்ஜிலிங் மலை பிரதேசத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்கக் கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்ற நிலையில் கூர்க்காலாந்து கோரிக்கையும் தீவிரமடைந்துள்ளது. நேற்று முதல் 3 நாள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
டார்ஜிலிங் உள்ளிட்ட கூர்க்காலாந்து பகுதிகளில் நேற்றைப் போல இன்றும் முழு அளவில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே கலிம்போங் என்ற இடத்தைச் சேர்ந்த மங்கல்சிங் ராஜ்புத் என்ற நபர் திடீரென தனி மாநிலம் கோரி தமது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடனே சம்பவ இடத்தில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரது உடலில் பரவிய தீயை அணைத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்தும் கூர்க்காலாந்து பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications