மதானியை விடுவிக்காவிட்டால் பாஜக தலைவர்களைக் கொல்லப் போவதாக மிரட்டல்
பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியை விடுவிக்காவிட்டால் கர்நாடக பாஜக தலைவர்களைக் கொல்லப் போவதாக மிரட்டி கடிதம் வந்துள்ளது.
இந்தக் கடிதம் கர்நாடக பாஜக அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், எங்கள் தலைவர் அப்துல் நாசர் மதானியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர் மீது பெங்களூரில் உள்ள அத்தனை வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
இதைச் செய்யத் தவறினால், உங்களது தலைவர்கள் சிலரை நீங்கள் இழக்க நேரிடும். அவர்களின் இறுதிச் சடங்குகளை நீங்கள் பார்க்க நேரிடும்.
உடனடியாக லோட்டஸ் டிவி சானலை நிறுத்துங்கள். இஸ்லாமிய சமுதாயத்திடம் அவர்கள் மன்னிப்பு கேட்க உத்தரவிடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பாஜக தவிர இந்து முன்னணி, விஎச்பி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்களைக் கொல்லப் போவதாகவும் அதில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் பாஜக பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையைத் தொடர்ந்து பெங்களூரில் பாஜக உள்ளிட்ட தலைவர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நகரிலும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications