திருப்பூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி செயலாளருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
திருப்பூர்: திருப்பூரில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பள்ளி செயலருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ளது அன்னை மெட்ரிக் குலேசன் பள்ளி. இங்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு காலை 7 மணிக்கு சிறப்பு வகுப்பு நடந்து வருகிறது. நேற்று நடந்த சிறப்பு வகுப்புக்கு மாணவி சுமதி (பெயர் மாற்றம்) தாமதமாக வந்துள்ளார்.
இதனை அறிந்த பள்ளியின் செயலாளர் கதிரேசன் (43) மாணவியை தனது அறைக்கு வரவழைத்துள்ளார். அப்போது, வகுப்புக்கு தாமதமாக வந்ததன் காரணத்தை கேட்டவாறு சுமதியை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார் கதிரேசன்.
இதனால், அதிர்ச்சி அடைந்த சுமதி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆவேசமடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு, பள்ளி முதல்வர் லட்சுமியிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.
அப்போது, உடன் இருந்த பள்ளி செயலாளர் கதிரேசன் மாணவி சுமதியை ஆபாசமாக பேசியுள்ளார். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினை அதிகரிக்கவே தகவல் அறிந்ததும் திருப்பூர் காவல்துறையினர் பள்ளிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையின்போது, கதிரேசன் தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார்.
இதைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு மாணவிகளிடம் தனித்தனியே நடத்திய விசாரணையில் "கதிரேசன் தகாத முறையில் நடந்து கொள்வார் என்றும் அவர் மிரட்டியதால் நாங்கள் யாரிடமும் சொல்லமுடியாமல் தவித்தோம்" என்றும் மாணவிகள் அழுது கொண்டே கூறியுள்ளனர்.
இதனை அறிந்து ஆத்திரம் அடைந்த பெற்றோர்களும், பொதுமக்களும் கதிரேசனை சரமாரியாக அடித்து துவைத்தனர். உடனடியாக போலீசார் அவர்களிடம் இருந்து கதிரேசனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதனிடையே, கதிரேசனை கைது செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என மாதர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications