மருத்துவமனை செல்லும் வழியில் டவுன் பஸ்ஸில் குழந்தை பெற்ற பெண்
திருப்பூர்: திருப்பூரில் பெண் ஒருவருக்கு டவுன் பேருந்தில் பிரசவம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் சிறு பூலுவப்பட்டியை அடுத்து உள்ள காவேரிபாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(31). விவசாய கூலி தொழிலாளி. அவரது மனைவி பூங்கொடி(26). நிறை மாத கர்ப்பிணியாக இருந்த பூங்கொடிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை வேலம்பாளையத்தில் இருந்து வீரபாண்டிக்கு செல்லும் 1-ஏ டவுன் பேருந்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பேருந்து கல்லூரி ரோடு வழியாக சென்றபோது பூங்கொடிக்கு வலி அதிகமானது. இதையடுத்து பேருந்தில் இருந்த சக பயணிகள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். பேருந்தை டிரைவர் தாராபுரம் ரோடு வழியாக தலைமை அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றார்.
ஆனால் உஷா தியேட்டர் நிறுத்தத்தை அடைவதற்குள் பூங்கொடிக்கு சுக பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் பெரிச்சிபாளையம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது அவர்கள் நலமாக உள்ளனர்.