அசாமில் விஸ்வரூபமெடுத்தது 3 மாநில கோரிக்கை! ரயில் மறியல்,பந்த் போராட்டத்துக்கு அழைப்பு!!
குவஹாத்தி: அசாம் மாநிலத்தை பிரித்து போடோலாந்து, கமதாபூர், கர்பி அங்லாங் மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரயில் மறியல், பந்த் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போடோலாந்து
அனைத்து போடோலாந்து மாணவர் அமைப்பு போடோலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 2-ந் தேதி 12 மணி நேர ரயில் மறியல் போராட்டத்துக்கும் ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 60 மணி நேர முழு அடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் போடோலாந்து நிர்வாக கவுன்சிலில் தனி மாநில அமைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இதனிடையே அசாம் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் சந்தன் பிரம்மா தலைமையில் போடோலாந்து நிர்வாக கவுன்சில் குழுவினர் டெல்லி விரைந்துள்ளனர். தனி மாநிலம் அமைக்கக் கோரி அக்குழு உள்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்த உள்ளனர்.
கமதாபூர் மாநிலம்
அனைத்து கூச் ராஜ்போங்சி மாணவர் அமைப்பினர் கமதாபூர் தனி மாநிலம் அமைக்கக் கோரி வருகின்றனர். இந்த அமைப்பின் சார்பில் நாளை முதல் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்று அந்த அமைப்பின் தலைவர் பிஸ்வாஜித் ராய் கூறியுள்ளார்.
கர்பி அங்லாங்
கர்பி அங்லாங் திமா ஹசோ மலைமாவட்டங்களை உள்ளடக்கி கர்பி அங்லாங் மாநிலம் அமைக்க வேண்டும் என்பது கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கோரிக்கை. கர்பி அங்லாங்கின் லோக்சபா எம்.பி. பார்லிமென்ட்டில் தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் ஆகஸ்ட் 12-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications