முதல்வர் ஜெ.மீது முட்டிய குட்டியானை காவேரி… நிலைகுலைந்து தடுமாறியதால் பதற்றம்
முதுமலை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முதுமலையில் உள்ள குட்டியானை காவேரி திடீரென முட்டியதால் அவர் தடுமாறினார். இதனால் பதறிப்போன முதல்வரின் பாதுகாவலர்கள் முதல்வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றிப்பார்க்க நாள்தோறும் பல்லாயிரணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், கொடநாட்டில் தங்கி உள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று கார் மூலம் கோடநாட்டிலிருந்து முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சென்றார்.
யானைகளுக்கு மகிழ்ச்சியாக பழங்கள் கொடுத்துக் கொண்டு வந்த முதல்வர் மீது குட்டியானை முட்டிய சம்பவம் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது.

கொடநாட்டில் ஓய்வு
முதல்வர் ஜெயலலிதா தற்போது கொடநாட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அதோடு அரசாங்க அதிகாரிகளை சந்தித்து விவாதிப்பது, அறிக்கைகள் தயாரிப்பது என அங்கேயும் தலைமைச் செயலகம் போல பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

முதுமலை யானைகள்
முதல்வர் ஜெயலலிதா முதுமலை வனவிலங்குகள் காப்பகத்தில், மாலையில் வழக்கமாக நடைபெறும், யானைகளுக்கு சோரூட்டல் நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்க சென்றார்.

யானைகள் வரவேற்பு
முதல்வர் வருகையை ஒட்டி முதுமலையில் அவருக்கு 24 யானைகளை வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பழங்களை ஊட்டிய முதல்வர்
வரிசையாக நின்று தனக்கு வரவேற்பு கொடுத்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. முதலில் மூர்த்தி என்ற யானைக்கும், அடுத்து, முதுமலை என்ற யானைக்கும் மா, பலா, வாழை என முக்கனிகளுடன், கரும்பு, வெல்லம், தேங்காய் உள்ளிட்ட சத்தான உணவுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். மேலும், யானைகளின் தும்பிக்கையை தடவிக்கொடுத்தார்.

காவேரியை கொஞ்சினார்
காவேரி என்ற 2 வயது குட்டியானைக்கு பழம், வெல்லம் கொடுத்து கொஞ்சினார் முதல்வர். தொடர்ந்து காவேரிக்கு முக்கனிகளையும், கரும்பு, தேங்காய் போன்றவற்றை மகிழ்ச்சியோடு வழங்கினார்.

முட்டிய காவேரி
அப்போது காவேரி துதிக்கையினால் ஆசீர்வாதம் செய்தது. அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து துதிக்கையை தூக்கி ஆசீர்வதித்தது. முதல்வர் சிரித்துக் கொண்டே அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். உடனே எதிர்பாராத விதமாக காவேரி திடீரென்று முதல்வரை முட்டியது. தொடர்ந்து இருமுறை இவ்வாறு செய்தது காவேரி.

தடுமாறிய முதல்வர்
அதுவரை சிரித்துக் கொண்டிருந்த முதல்வர், திடீரென்று தடுமாறினார். இதனால் பதறிப் போன அதிகாரிகள் காவேரியை விலக்கி விட்டனர். இதில் முதல்வருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. முதல்வர் மீது குட்டியானை திடீரென முட்டியதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

விருந்தினர் மாளிகையில் ஓய்வு
இதனைத் தொடர்ந்து கார் மூலம் முதுமலை கார்குடிபகுதியில் உள்ள விருந்தினர் விடுதிக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.வனப்பகுதிக்குள் முதல்வர் ஜெயலலிதா திடீரென ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின்பு கொடநாடு திரும்பினார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு கொடநாடு முதல் முதுமலை வரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications