போலீஸ் உடையில் கடத்தினர்… அனுமன் சேனா மாநில தலைவர் கோவை கமிஷனரிடம் பரபரப்பு புகார்
கோவை: காணாமல் போன அனுமன் சேனா அமைப்பின் மாநில தலைவர் சக்திவேல் வீடு திரும்பியுள்ளார். தன்னை சிலர் காரில் கடத்தி சென்றதாக போலீஸ் கமிஷனரிடம் அவர் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலையைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவையில், இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி மூகாம்பிகை மணி, அனுமன் சேனாவின் மாநிலத் தலைவர் சக்திவேல் என மொத்தம் 14 பேருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் சக்திவேலும், அவரது நண்பர் ராமராஜும் தீடீரென்று காணாமல் போனார்கள். அவர்கள் குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று மாலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். போலீஸ் உடையில் வந்து தன்னை சிலர் கடத்திச் சென்றதாக புகார் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சக்திவேல் கூறியதாவது:‘
‘நானும், எனது நண்பர் ராமராஜூம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு விழாவிற்கு கோத்தகிரி சென்றிருந்தோம். விழா முடிந்து கோவைக்கு பஸ்சில் வந்தோம். சிறுமுகையில் ராமராஜ் இறங்கிவிட்டார். நான் கவுண்டம்பாளையத்தில் இறங்கி எனது இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு வீட்டிற்கு கிள்ம்பினேன்.
அப்போது, போலீஸ் உடையில் ஒருவரும் மற்ற இருவரும் வந்து உங்கள் பாதுகாப்புக்காக வந்திருக்கிறோம் என்றனர். மேலும் அவர்கள், மோட்டார் சைக்கிளை இங்கேயே நிறுத்திவிட்டு எங்களுடன் காரில் வாருங்கள். மோட்டார் சைக்கிளை பின்னர் எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். நானும் பாதுகாப்புக்காக வந்தவர்கள்தானே என்று அவர்கள் வந்த காரில் ஏறினேன்.
கார் சிறிது தூரம் சென்றதும் அவர்களில் ஒருவன் என் முகத்தில் கைக்குட்டையை வைத்து அமுக்கினார். உடனே நான் மயங்கிவிட்டேன். மயக்கம் தெளிந்தபோது கார் திருவனந்தபுரத்தில் ஒரு நெரிசலான சாலையில் சென்று கொண்டிருந்தது. நீங்கள் யார்? என்னை ஏன் கடத்தி செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, உன் உடலில் கல்லை கட்டி கடலில் தள்ளிவிட போகிறோம் என்றான் ஒருவன்.
உடனே நான் காரின் கதவை திறந்து கொண்டு கீழே குதித்து தப்பினேன். அதன் பின்னர் ரயில் ஏறி அங்கிருந்து பாலக்காடு வந்து, அங்கிருந்து பஸ்ஸில் கோவை வந்து சேர்ந்தேன். இந்நிலையில், எங்கள் நிர்வாகிகளுடன் கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து எனக்கு பாதுகாப்பு அளிக்க கோரி மனு கொடுத்துள்ளேன்'' என்றார். காணாமல் போன நபர் திரும்பி வந்து கடத்தப்பட்டதாக புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications