மானாமதுரை அருகே 2 போலி டாக்டர்கள் கைது
மானாமதுரை: திருப்புவனம் அருகே பழையனூர் கிராமத்தில் 5வருடங்களாக கிளினிக் நடத்தி வந்த இரண்டு போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்திலேயே மிகப் பெரிய கிராமம் பழையனூர். சுற்று வட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இங்கு கீழசொரிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செந்தில்வேல்கண்ணன் ஸ்ரீசக்தி கிளினிக் என்ற பெயரில் பொதுமருத்துவம் பார்த்துள்ளார். பழையனூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் தனியாக கிளினிக் நடத்தி வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் கடந்த 5வருடங்களாக கிராம மக்களுக்கு சிகிச்சையளித்து வந்தனர். குறைந்த கட்டணத்தில் இவர்கள் சிகிச்சையளித்தால் ஏராமானோர் இவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தனர். காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களுக்கு சலைன் பாட்டில்கள் மூலம் குளுகோஸ் ஏற்றி சிகிச்சையளித்துள்ளனர்.
ஒரு சிலருக்கு நோய்கள் குணமாகாமல் பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து தகவலறிந்த பழையனூர் ஆரம்ப சுகாதார நிலைய ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் பழையனூர் காவல்நிலையத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலின் சான்றிதழ் பெற்ற மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருந்து ,மாத்திரைகள் வழங்கியதாகவும், நோயாளிகளுக்கு ஊசி, மருந்து வழங்கி போலி மருத்துவமனை நடத்தி வருவதாகவும் புகார் செய்தார். இதனையடுத்து பழையனூர் போலீசார் அதிரடி சோதனை நடத்தி இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த மருந்து பாட்டில்கள், ஊசி மருந்துகள், சலைன் பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கண்ணன் ப்ளஸ் டூ வரை படித்தவர் என்றும் சுரேஷ் பத்தாம் வகுப்பு வரை படித்தவர் என்றும் வேறு மருத்துவர்களிடம் உதவியாளர்களாக சேர்ந்து தொழில் கற்று கிராமப்புற பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications