மாஜி ராணுவ தளபதி மீதான தாக்குதல்... 4 சீக்கியர்களும் குற்றவாளி என லண்டன் கோர்ட் தீர்ப்பு
லண்டன்: அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடத்தப்பட்ட ஆபரேஷன் கோல்ட் ஸ்டார் தாக்குதல் திட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்திய லெப்டினென்ட் ஜெனரல் குல்தீப் சிங் பிரார் மீதான தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட 4 சீக்கியர்களும் குற்றவாளி என்று லண்டன் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு தனது மனைவியுடன் லண்டன் போயிருந்தபோது தெருவில் வைத்து தாக்கப்பட்டார் பிரார். அவரது கழுத்தில் கத்தியால் குத்தி காயப்படுத்தினர் குற்றவாளிகள்.
இந்த தாக்குதல் வழக்கில் ஒரு பெண் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் அப்ரூவராக மாறினார். இந்த வழக்கில் தற்போது நான்கு பேரும் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

1984ல் நடந்த தாக்குதல்
1984ம் ஆண்டு பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்த சீக்கிய தீவிரவாதிகளை வெளியேற்ற அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவின் பேரில் ஆபரேன் ப்ளூஸ்டார் என்ற தாக்குதலை நடத்தியது ராணுவம்.

பிரார் தலைமையில்
இந்தத் தாக்குதலை பிரார் தலைமையிலான படையினர் மேற்கொண்டனர். இதில் பிந்தரன்வாலே உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பொற்கோவிலே ரத்த சகதியானது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரார் மீது தாக்குதல்
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தனது மனைவியுடன் லண்டன் வந்திருந்தார் பிரார். அப்போது தெருவில் ஓல்டு கியூபெக் தெருவில் வைத்து பிராரை தாக்கினர் இந்த நால்வரும். அவரது கழுத்தில் கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்தார் பிரார்.

நால்வரும் கைது
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தில்பக் சிங், மந்தீப் சிங் சந்து, ஹர்ஜித் கெளர் பர்ஜிந்தர் சிங் சந்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பர்ஜிந்தர் சிங் சந்தா மட்டும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

நால்வரும் குற்றவாளிகள்
இந்த வழக்கை விசாரித்த செளத்வாக் கிரவுன் கோர்ட், நான்கு பேரும் குற்றவாளிகள். உள்நோக்கத்துடன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் கோர்ட் வர்ணித்துள்ளது.
இவர்களுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications