பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: திருச்சியில் கறுப்புக்கொடி காட்ட முயன்ற வைகோ உட்பட 3000 பேர் கைது
திருச்சி: பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி விமான நிலைய சாலையில் கறுப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ உள்ளிட்ட 3000 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஓலைக்குடிப்பட்டியில், பெல் பவர் பிளாண்ட் பைப்பிங் யூனிட் என்ற பாய்லர் ஆலையை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலையில் திருச்சி வந்தார்.
பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி விமானநிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் அரசியல் கட்சியினர் கறுப்புக் கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன், தமிழ்தேசிய பொதுவுடமை கட்சியை சேர்ந்த மணியரசன் உள்ளிட்டவர்கள் தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வைகோ கைது
அப்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்ட முயன்ற வைகோ உள்ளிட்ட 3000 பேர் கைது செய்யப்பட்டு அங்கிருந்த திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் கைது
பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயம் சங்கம் சார்பில் திருமயம் பேருந்துநிலையத்தில் கறுப்புக் கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து தஞ்சை மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் செபஸ்டியன் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர்.

நாம் தமிழர் கட்சியினர்
இதேபோல் கறுப்புக் கொடி காட்ட முயன்ற நாம் தமிழர் கட்சியின் தரணி ரமேஷ் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு முன்பாக கைது செய்யப்படுவதை கண்டித்து, கைதாக மறுத்த நாம் தமிழர் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தல் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமருக்கு எதிராக கோஷம்
கைது செய்யப்பட்ட அனைவரும் பிரதமரின் வருகையை கண்டித்து முழக்கமிட்டனர். கொடுங்கோலன் ராஜபக்சே தலைமையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு கொடிபிடிக்கிறது என்று தெரிவித்தனர்.
கைதான அனைவரும் சிலமணி நேரங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications