120 அடியை தொடுகிறது மேட்டூர் அணை.. உபரி நீர் திறப்பு..கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர்: மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை நெருங்கியுள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி 118 அடியாக நீர் இருப்பு உயர்ந்துள்ளது. இதையடுத்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதையடுத்து காவரிரிக் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேறி வருகிறது. ஏற்கனவே விநாடிக்கு 40,000 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.
தற்போது கூடுதலாக 20,000 கன அடி நீர் உபரியாக திறந்து விடப்படுவதால் காவிரியில் வெள்ளம் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தண்டோரா
இதன் காரணமாக காவிரிக் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. தற்போது அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்றைக்குள் அணை முழுமையாக நிரம்பும் என்று தெரிகிறது.

அபாய சங்கு ஒலிப்பு
அணையில் இருந்து மின்நிலையங்கள் வழியாக 24 ஆயிரத்து 612 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்து அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படும் 16 கண் மதகு, இன்று காலை 8.20 மணிக்கு திறக்கப்பட்டது. முன்னதாக அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டது.

படிப்படியாக திறப்பு
ஆரம்பத்தில் 10 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. காலை 10 மணிக்கு 20 ஆயிரம் கனஅடியாகவும், 12 மணிக்கு 30 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 70ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

அதிகாரிகள் முகாம்
பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் அசோகன், மேட்டூர் ஆர்டிஓ சந்திரன், சென்னை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், சேலம் கண்காணிப்பு பொறியாளர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் அணையை கண்காணித்து வருகின்றனர்.

36வது ஆண்டாக நிரம்பும் மேட்டூர்
மேட்டூர் அணை வரலாற்றில் இதுவரை 36 ஆண்டுகள் அணை நிரம்பி உள்ளது. இன்று 37வது ஆண்டாக நிரம்புகிறது. 40வது முறையாக அணையின் 16 கண் மதகு வழியாக உபரி நீர் இன்று திறக்கப்பட்டுள்ளது.

16 கண் மதகுகள்
கடைசியாக 2005ம் ஆண்டு அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக 2 லட்சத்து 31 ஆயிரத்து 802 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. அணை வரலாற்றில் அதிக பட்சமாக 1961ம் ஆண்டு 3 லட்சத்து ஆயிரத்து 51 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 16 கண் மதகு வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஓகனேக்கலில் வெள்ளம்
காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தொடர்ந்து 15வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு அமைப்பு
தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மேடான இடங்களுக்கு செல்ல ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. சுற்றுலா பயணிகள் அருவிக்கு அருகில் செல்லாதபடி தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications