தமிழகத்தில் மேலும் ஒரு பரபரப்பான வாக்கிங் படுகொலை!
சேலம்: தமிழகத்தில் மேலும் ஒரு வாக்கிங் படுகொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் வாக்கிங் போன வக்கீல் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முக்கியப் பிரமுகர்கள காலையில் வாக்கிங் போகும்போது கொல்வது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
முன்பு மதுரையில் திமுக பிரபலமான தா.கிருட்டிணன் வாக்கிங் போனபோது படுகொலை செய்யப்பட்டார். அவரது கட்சியினரே அவரை கூலிப்படையினராக செயல்பட்டு கொன்றனர்.
அதேபோல இன்னொரு திமுக பிரபலமான கே.என்.நேருவின் தம்பியான ராமஜெயம் திருச்சியில் வாக்கிங் போனபோது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கை, கால்களைக் கட்டி அவரது பிணத்தை வீசி விட்டுப் போனார்கள் கொலையாளிகள்.
இதேபோல சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணாவும், வாக்கிங் போனபோதுதான் கொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில்,சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் வக்கீல் இளம்வழுதி என்பவர் வாக்கிங் போனபோது சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
காலையில் நடைபயிற்சி சென்ற அவர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் பிணமாக கிடந்துள்ளார். அவரது தலையில் வெட்டுக் காயம் இருப்பதால் இது கொலையாக இருக்கும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்,இளம்வழுதி கொலையை கண்டித்து சேலத்தில் சுமார் 4500 வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications