கேரளாவில் கனமழைக்கு 14 பேர் பலி: கொச்சி ஏர்போர்ட் 2வது நாளாக மூடல்
கொச்சி: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியாகியுள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
கேரளாவில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு ஆற்றில் அபாய அளவைத் தொடும் அளவு நீர் ஓடுகிறது. ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிராமங்களுக்கு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் கேரள மக்கள் இந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் அலுவா ஆற்றங்கரையோரம் உள்ள சிவன் கோவிலில் கூடினர். பாதி கோவில் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது.

ஓடு தளத்தில் வெள்ளநீர் புகுந்ததால் கொச்சி விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. இன்று இரண்டாவது நாளாகவும் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மேலும் கனமழையால் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 14 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனமழையால் 20,000 பேர் இடுக்கி மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் மழையால் பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. கடற்படை வீரர்கள் கொச்சிக்கு அருகில் உள்ள கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 180 பேரை நேற்று காப்பாற்றினர்.












Click it and Unblock the Notifications