சர்ச்சை அறிக்கை.. ஆண்டனி மன்னிப்பு கேட்டாக வலியுறுத்தி நாடாளுமன்றம் முடக்கம்!!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் 'பாகிஸ்தான்' தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அறிக்கை தாக்கல் செய்த பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் நாள் முழுவதும் முடங்கியது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நேற்று அதிகாலை பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, பாகிஸ்தான் ராணுவ சீருடை அணிந்த 20 தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு அப்போதே பாஜகவின் அருண்ஜேட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
ஆனால் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் ராணுவமும் 20 தீவிரவாதிகளும் இணைந்து தாக்குதலை நடத்தியதாகக் கூறப்பட்டிருந்தது.
இப்படி முரண்பட்ட அறிக்கைகள் வெளியானதைக் கண்டித்து நேற்று இரவு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனியின் வீடு முற்றுகையிடப்பட்டது. இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.
நாடாளுமன்றத்துக்கு தவறான தகவல் கொடுத்த பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனி மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக எம்.பிக்கள் வலியுறுத்தினர். இதனால் லோக்சபா அடுத்தடுத்து என பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதேபோல் ராஜ்யசபாவும் ராஜ்யசபாவும் கூடுவதும் ஒத்திவைப்பதுமாக இருந்த நிலையில் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபா பிற்பகல் 2 மணிக்கு கூடிய போது ஆந்திரா எம்.பிக்கள் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
ராஜ்யசபாவும் பிற்பகல் 2 மணிக்கு கூடிய போது ஆண்டனியின் சர்ச்சை அறிக்கையால் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் 3 மணிக்கு அவை கூடிய போது, உணவு பாதுகாப்பு மசோதா அமளிக்கு இடையே அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் உணவு பாதுகாப்பைவிட எல்லை பாதுகாப்பு முக்கியம் என்று பாஜக எம்.பிக்கள் வலியுறுத்த சபை நடவடிக்கை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.