9வது நாளாக ஓயாத 'சீமாந்த்ரா' போராட்டங்கள்... 6வது அமைச்சர் ராஜினாமா கடிதம்!
ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயல்சீமா பகுதிகளை உள்ளடக்கிய சீமாந்திராவில் 9 வது நாளாக போராட்டங்கள் இன்றும் தொடர்ந்தன. தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அமைக்கக் கூடாது என்பதற்காக கடந்த ஜூலை 30-ந் தேதி முதல் தொடர்ந்து போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறது 'சீமாந்திரா'. ஏற்கெனவே முதல்வர் கிரண்குமார் ரெட்டி அமைச்சரவையில் இருந்து 5 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இன்று 6வதாக அமைச்சர் தொட்ட நரசிம்ஹம் தமது ராஜினாமா கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி வைத்தார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ராஜினாமா செய்த அமைச்சர் விஸ்வரூப் தலைமையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதேபோல் அமைச்சர் அருணா குமாரி, திருப்பதியில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மோட்டார் சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்தார். அவரும் தமது அமைச்சர் பதவியை ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காக்கிநாடாவில் மத்திய அமைச்சர் பல்லம் ராஜூவின் இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். பல்லம் ராஜூ ராஜினாமா செய்யும் வரை போராட்டமும் முற்றுகையும் தொடரும் என்றனர் போராட்டக் குழுவினர்.
ஓங்கோலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. விஜயவடா- மசூலிப்பட்டினம் நெடுஞ்சாலை எங்கும் மாணவர் தலைகளாக காட்சியளித்தன.
மேலும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வேங்கடயபாளையம் முதல் 35 கிலோ மீட்டர் பாதயாத்திரையை காங்கிரஸ் எம்.எல்.ஏ. தொட்ட திருமூர்த்துலு மேற்கொண்டுள்ளார். இந்த பாதயாத்திரை இன்று மாலை காக்கிநாடாவில் நிறைவடைகிறது.
இதனிடையே ரம்ஜானை முன்னிட்டு இன்று பிற்பகல் முதல் நாளை மாலை வரை முழு அடைப்பை கைவிடுவதாக ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கான கூட்டுக் குழு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications