மறுபடியும் அதிமுகவினர் மோதல்... எம்.எல்.ஏ முத்துச்செல்வி ஆதரவாளர் மீது தாக்குதல்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் நடந்த அரசு விழாவில் முத்துசெல்வி எம்எல்ஏவின் ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் தாலுகாவான மேலநீலிதநல்லூர் ஓன்றியம் குலசேகரமங்கலம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து நடந்தது. இதில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் மேலநீலிதநல்லூர் தலைவர் முருகையா உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.
மாலை நடந்த கூட்டத்திற்கு தொகுதி எம்எல்ஏ முத்துசெல்வி தனது ஆதரவாளர்களுடன் சென்று பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிய பின் அங்கிருந்து புறப்பட்டார். முத்துசெல்வி எம்எல்ஏவை வரவேற்று சூரமங்கலம் அதிமுக கிளை செயலாளர் செண்பகராஜ் டிஜிட்டல் பேனர் வைத்திருந்தார்.
அம்மா திட்ட முகாம் முடிந்து சென்ற முருகையா ஆதரவாளர்கள் பேனர் வைத்தது தொடர்பாக செண்பகராஜிடம் தகராறு செய்தனர். ஊர் பெரியவர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர்.
இந்நிலையில் இரவு செண்பகராஜ் பக்கத்து ஊருக்கு சென்று கிராமத்துக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது முருகையா ஆதரவாளர்கள் 6 பேர் அவரை வழிமறித்து சராமரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி வி்ட்டனர்.
படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோஷ்டி மோதலில் சங்கரன்கோவில் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.