டெல்லியை தீவிரவாதிகள் தாக்கலாம்... ஐபி எச்சரிக்கை
டெல்லி: டெல்லியில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக டெல்லி காவல்துறைக்கு மத்திய உளவுப் பிரிவான ஐபி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக செய்தி ஒன்றையும் அது காவல்துறை ஆணையருக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஐபி எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துக் காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சிறப்பு ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவத்சவா கூறுகையில், ஐபியிடமிருந்து தீவிரவாத தாக்குதல் அபாயம் குறித்த கடிதம் வந்துள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பாக இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மார்க்கெட்கள், வணிக வளாகங்கள், விமான நிலையம், ரயில் நிலையங்கள், உயர்ந்த கட்டடங்கள், அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.