தனி ஈழம் தான் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு-பொன் முத்துராமலிங்கம்
நெல்லை: இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு தனி ஈழம் தான் தீர்வாக இருக்க முடியும் என நெல்லையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் தீர்மானக்குழு தலைவர் பொன் முத்துராமலிங்கம் கூறினார்.
டெசோ அமைப்பின் சார்பில் தீர்மானத்திற்கு இணங்க ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்காக மத்திய அரசை வலியுறுத்தி நெல்லை மாவட்ட திமுக சார்பில் நெல்லை சந்திப்பில் ஆர்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தீர்மானக்குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன் முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்களின் வாக்குகளை பதிவு செய்து அதன் அடிப்படையில் தனி ஈழம் என்பது தான் இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு.
13வது அரசியல் சட்ட திருத்தத்தினை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்காக இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கச்ச தீவில் மீன்பிடிப்பதற்கும், மீனவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் உரிமை உள்ளது என்பதற்கு சட்டம் உள்ளது. இதையும் மத்திய அரசு அக்கரையில் எடுத்து கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் மத்திய அரசு காப்பாற்ற தவறினால் இந்த போராட்டம் பல்வேறு வடிவம் பெறும். டெசோ போராட்டம் வெற்றி பெறும் என்றார் அவர்.
ஆர்பாட்டத்தில் நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.